உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் ஆர்வம்! 49,824 ஹெக்டேர் பரப்பளவிலான சாகுபடிக்கு பதிவு

பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் ஆர்வம்! 49,824 ஹெக்டேர் பரப்பளவிலான சாகுபடிக்கு பதிவு

விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. ஆண்டுதோறும், வடகிழக்கு பருவமழை காலத்தில் புயலினாலும், தொடர் கனமழையினாலும், வயலில் மழைநீர் அளவுக்கு அதிகமாக தேங்கி பயிர்கள் சேதமடைகின்றன. இதனால், ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு பயிரில் சரியான விளைச்சல் இல்லாமல் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பயிர் இழப்பினை ஈடுசெய்யவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்பதற்காகவும் ஆண்டுதோறும் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 2025-26ம் ஆண்டில் சாகுபடி செய்யும் காரீப், சிறப்பு (சம்பா) மற்றும் ராபி பருவத்தில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாவட்டத்தில் சிறப்பு (சம்பா) பருவத்திற்கு 13 வட்டாரங்களில் உள்ள 794 கிராமங்களில் நெல் பயிருக்கும், 34 குறுவட்டங்களில் உளுந்து, மணிலா, கரும்பு மற்றும் 14 குறுவட்டங்களில் எள் பயிருக்கும் காப்பீடு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில், நெல் பயிருக்கு கடந்த 15ம் தேதி, உளுந்து பயிருக்கு வரும் 30ம் தேதி, மணிலாவிற்கு ஜன., 20ம் தேதி, எள்ளுக்கு ஜன.. 31ம் தேதி, கரும்புக்கு மார்ச் 31ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, விவசாயிகளின் நலனுக்காக நெல் பயிருக்கு காப்பீடு செய்யும் கால அவகாசம் வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில், நெல் ஏக்கருக்கு 544.28 ரூபாயும், உளுந்து 254.90 ரூபாயும், மணிலா 467.81 ரூபாயும், எள் 181.43 ரூபாயும், கரும்பு 1149.03 ரூபாயும் விவசாயிகள் காப்பீடு தொகையாக செலுத்த அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, கடந்த 17ம் தேதி வரை மாவட்டத்தில் 51,500 விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள 46,323 ஹெக்டேர் பரப்பளவிலான நெல் பயிருக்கு காப்பீடு செய்துள்ளனர். உளுந்து பயிருக்கு 4,463 விவசாயிகள் 3,239 ஹெக்டேரும், மணிலாவிற்கு 270 விவசாயிகள் 176 ஹெக்டேரும், எள்ளுக்கு 11 விவசாயிகள் 3 எக்டரும், கரும்புக்கு 108 விவசாயிகள் 82 ஹெக் டேரும் என மொத்தம் மாவட்டத்தில் 56,352 விவசாயிகள் 49,824 ஹெக்டேர் பரப்பளவில் தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு காப்பீடு செய்துள்ளனர். மாவட்டத்தில் நெல், உளுந்து, மணிலா, எள், கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அரசின் கால அவகாசத்திற்குள் காப்பீடு செய்து பயன்பெறுமாறு வேளாண் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை