மூடிய குவாரியில் செம்மண் கடத்தல் கம்முனு இருக்கும் கனிம வளத்துறை புகாருக்குப்பின் விழித்த காவல் துறை
வானுார் அடுத்த தலக்காணிக்குப்பத்தில் செம்மண் குவாரியில் அரசு அனுமதி வழங்கிய அளவு செம்மண் எடுத்ததால் மண் எடுப்பதை தனியார் நிறுவனம் நிறுத்தினாலும், சமூக விரோதிகள் செம்மண் கடத்தலில் ஈடுபடுவது தொடர்கிறது.பிரம்மதேசம் காவல் நிலையத்திற்குட்பட்ட வானுார் தாலுகா, தலக்காணிக்குப்பத்தில் கடந்தாண்டு செம்மண் குவாரி நடத்த தனியாருக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. அதன்பேரில் அந்த பகுதியில் செம்மண் எடுத்து அரசு மற்றும் தனியார் பணிகளுக்காக பல இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்நிலையில் கடந்த மாதத்திற்கு முன் அரசு அனுமதி வழங்கிய அளவு செம்மண் எடுக்கப்பட்டதால் அந்த இடத்தில் செம்மண் எடுப்பதை தனியார் நிறுவனம் நிறுத்தியது.அதன் பின் அந்த இடத்தில் சமூக விரோதிகள் பட்டப் பகலில் ஜே.சி.பி., மூலம் டிராக்டரில் செம்மண் எடுத்து கடத்திச் செல்கின்றனர்.இது குறித்து அப்பகுதி மக்கள் கனிமவளம், வருவாய் மற்றும் காவல் துறையினரிடம் புகார் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.மேலும், செம்மண் குவாரி உரிமையாளர் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் கூறியதன் பேரில் தனிப்படை போலீசார் செம்மண் கடத்தலில் ஈடுபட்டவர்களையும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஜே.சி.பி., டிராக்டரையும் தேடி வருகின்றனர்.செம்மண், கூழாங்கற்கள் குவாரி நடந்து முடிந்த இடத்தில் மீண்டும் கடத்தல் நடக்காமல் இருக்க அந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா வைக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.