உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பொன்முடி மீதான குவாரி வழக்கு தேர்வு வாரிய அதிகாரி சாட்சியம்

பொன்முடி மீதான குவாரி வழக்கு தேர்வு வாரிய அதிகாரி சாட்சியம்

விழுப்புரம்:விழுப்புரத்தில், முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய டி.எஸ்.பி., ஆஜராகி சாட்சியம் அளித்தார். விழுப்புரம் மாவட்டம், வானுார் அருகே பூத்துறையில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக அனுமதி மீறி செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக, முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி உள்ளிட்ட 8 பேர் மீது 2012ம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்தனர். இந்த வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடக்கிறது. இவ்வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட லோகநாதன் உடல் நலம் குறைவால் இறந்தார். இந்த வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில், தற்போது வரை 55 பேர் சாட்சியம் அளித்த நிலையில் 30 பேர் அரசு தரப்பிற்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்தனர். இந்நிலையில், இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில், ஜெயச்சந்திரன், சதானந்தன், கோபிநாதன், ராஜமகேந்திரன் ஆகியோர் ஆஜராகினர். பொன்முடி, கவுதமசிகாமணி, கோதகுமார் ஆகியோர் ஆஜராகவில்லை. வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக, விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு முன்னாள் டி.எஸ்.பி.,யும் தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுவாரிய டி.எஸ்.பி.,யாக பணியாற்றும் தேசிகன் ஆஜராகி, வழக்கில் கூடுதல் இறுதி அறிக்கை தாக்கல் செய்தது தொடர்பாக சாட்சியம் அளித்தார். இவரின் சாட்சியம் முடிந்ததும் அவரிடம் குற்றம் சாற்றப்பட்ட 7 பேரின் தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை செய்தனர். இந்த விபரங்களை பதிவு செய்த மாவட்ட நீதிபதி மணிமொழி, அடுத்த சாட்சிகளின் விசாரணைக்காக இவ்வழக்கை வரும் அக்., 8ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
செப் 24, 2025 05:43

எதிராக சாட்சி சொன்னால் அடுத்தநாள் காலையில் செல்லும் நடை பயிற்சிதான் அவரின் கடைசி நடையாக இருக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை