இயல், இசை, நாடக கலைஞர்களின் ஓய்வூதிய முறையை சுலபமாக்க வேண்டும் : மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குனர் கோரிக்கை
விழுப்புரம்: இயல், இசை, நாடக கலைஞர்கள் ஓய்வூதியம் பெறும் முறையை தமிழக அரசு சுலபமாக்க வேண்டும் என தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குனர் ராஜாராமன் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் விழுப்புரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மக்களின் பண்பாட்டை விளக்குவதில் முக்கிய பங்கு வகித்து வரும் இயல், இசை, நாடக துறையில் உள்ள கலைஞர்களின் நலனுக்காக அரசு பல நன்மைகளை செய்துள்ளது. இவர்களுக்கு ஓய்வூதியம், நலவாரிய உறுப்பினர் அட்டை உட்பட பல வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பாரம்பரியமான இந்த கலைகளை யாரும் பெரும்பாலும் விரும்பாமல் உள்ளனர். ஆனால், அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்படும் ஒவ்வொரு நிகழ்வுகளிலும், இந்த இயல், இசை, நாடக கலைஞர்களின் அரங்கேற்றம் முதலில் நடத்தி அதற்கான கவுரவம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 85 ஆயிரம் கலைஞர்கள் உள்ளனர். இவர்களில், ஓய்வூதியம் பெறுவோர் 10 ஆயிரம் பேருக்கும் மேல் உள்ளனர். இவர்கள் ஓய்வூதியம் பெற வி.ஏ.ஓ., வருவாய் ஆய்வாளர், தாசில்தார், ஆர்.டி.ஓ., ஆகியோரிடம் கையெழுத்து பெற்று இறுதியாக, கலை பண்பாட்டு மையம், உதவி இயக்குனரிடம் அந்த மனு வருகிறது. இந்த முறையை அரசு மாற்றி, நேரடியாக அவர்கள், உதவி இயக்குநரிடம் கையெழுத்து பெறும் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். இதன் மூலம் அவர்களின் அலைச்சல் குறைவதோடு, சுலபமாக ஓய்வூதியம் பெறும் வசதி ஏற்படும். இதனை அரசு பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு ராஜாராமன் கூறினார்.