விழுப்புரம்: விழுப்புரம் வட்டாரத்தில் பொங்கல் பண்டிகைக்கு பயன்படுத்தும் மஞ்சள் பரவலாக சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராகி உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்புடன் மஞ்சளையும் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை ஜன.15ம் தேதி கொண்டாடப்படுகிறது. தை திருநாளாம் பொங்கல் பண்டிகையன்று, புதுப்பானையில் மஞ்சள் கிழங்குடன் கூடிய கொத்துகள் கட்டி அலங்காரம் செய்து, புத்தரிசியால் பொங்கல் வைத்து, சூரியனை வழிபடுவது வழக்கம்.விழுப்புரம் மாவட்டத்தில், பொங்கல் பண்டிகைக்கான முக்கிய பொருளான பன்னீர் கரும்பு மற்றும் மஞ்சள் சாகுபடியில், விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு, விற்பனைக்கு தயார்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, விழுப்புரம் அருகே பொங்கலுக்கு பயன்படுத்தப்படும் மஞ்சள் செடிகள் பரவலாக விவசாயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர், நவம்பர் மாதத்தில் விதைப்பு செய்யப்பட்டு, ஜனவரி மாதம் பொங்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக இந்த மஞ்சள் அறுவடை செய்யப்படும்.விழுப்புரம் அருகே ஆலத்தூர் கிராமத்தில் மஞ்சள் சாகுபடி செய்து அறுவடைக்கு, விவசாயிகள் தயார்படுத்தி வருகின்றனர். விழுப்புரம் அருகே ஆலத்தூர், நன்னாடு, அத்தியூர், பிடாகம், குச்சிப்பாளையும், தொரவி, ராதாபுரம், சின்னகல்லிப்பட்டு, மழவந்தாங்கல் உள்ளிட்ட கிராமங்களில் பரவலாக மஞ்சள் பயிர் செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராகி உள்ளது.ஆலாத்தூர் விவசாயி ரங்கநாதன் கூறுகையில், ஆண்டுக்கு ஒரு முறை இந்த மஞ்சள் விற்பனை நடக்கிறது. இதற்காக நாங்கள் ஆண்டு தோறும் மஞ்சள் பயிரிட்டு வருகிறோம். தற்போது மஞ்சள் விளைந்து செழிப்பாக உள்ளது. பொங்கல் பண்டிகை ஒரு வாரத்துக்கு முன்பு, மஞ்சள் செடிகளை கிழங்குடன் அறுவடை செய்து விற்பனைக்கு அனுப்புவோம். ஒருகொத்து மஞ்சள் ரூ.10க்கும் முதல் 50 முதல் 60 செடிகள் வரை உள்ள ஒரு பாத்தி மஞ்சள் ரூ.400 முதல் ரூ.500க்கும் விற்போம். மொத்தமாக வியாபாரிகள் வந்து வாங்கி செல்வார்கள்.இந்தாண்டும் மஞ்சள் கிழங்குகளின் விளைச்சல் நன்றாகவும், இந்த பொங்கல் பண்டிகையையொட்டி அறுவடைக்கு தயார் நிலையிலும் உள்ளது. தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்புடன், இந்த அத்தியாவசிய மஞ்சளையும் சேர்த்து வழங்க வேண்டும் என்றனர்.