உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சாராயம், போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க தீவிரம்: கோட்ட, கிராம அளவில் குழு அமைத்து கண்காணிப்பு

சாராயம், போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க தீவிரம்: கோட்ட, கிராம அளவில் குழு அமைத்து கண்காணிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம், போதைப் பொருள் விற்பனையை தடுக்கவும், அது குறித்து தகவல் தெரிவிக்கவும் கோட்ட, கிராம அளவில் குழுக்கள் உருவாக்கப்பட்டு, கண்காணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் கடந்தாண்டு மெத்தனால் கலந்த விஷசாராயம் குடித்ததில் 14 பேர் இறந்தனர். தற்போது, கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் அருந்திய 59 பேர் வரை இறந்துள்ளனர். இதனால், மாநிலம் முழுவதும், கள்ளச்சாராய ரெய்டு நடத்தி தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.விழுப்புரம் மாவட்டத்திலும், கடந்த 5 நாட்களாக தீவிர ரெய்டு மேற்கொண்டுள்ளனர். முதல்கட்டமாக 173 பேர் மீது வழக்குகள் பதிந்து, 165 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2,000 மதுபாட்டில்கள், 310 லிட்டர் சாராயம், 56 லிட்டர் கள்ளு ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து, மதுவிலக்கு ரெய்டும், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இது குறித்து, கலெக்டர் பழனி கூறியிருப்பதாவது: விழுப்புரம் மாவட்டத்தில், கள்ளச்சாராயம், போதைப்பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுப்பது தொடர்பாக, தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், கடந்தாண்டு ஏப்.1 முதல் நேற்று வரை மாவட்டத்தில் 10,468 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 10,236 நபர்கள் கைது செய்யப்பட்டுஉள்ளனர்.அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் விதமாக, கடந்த 2023ம் ஆண்டில் 35 நபர்கள் மீதும், 2024ம் ஆண்டில் 4 நபர்கள் மீதும் என மொத்தம் 39 நபர்கள் மீது, தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

குழு அமைத்து கண்காணிப்பு

தொடர்ந்து, கள்ளச்சாராயம், போதைப் பொருள்கள் விற்பனையை தடுக்கவும், அது குறித்து கிராம அளவில் தகவல் தெரிவிக்கவும், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலர், சுய உதவிக்குழு உறுப்பினர், கிராம செவிலியர் மற்றும் அங்கன்வாடி பணியாளர் ஆகியோரை கொண்ட குழுக்கள், கிராம அளவிலும், கோட்ட அளவில் உருவாக்கப்பட்டு, கிராமங்களில் கண்காணித்து, அவர்கள் மூலம் தகவல் பெறப்பட்டும், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

10581ல் புகார் அளிக்கலாம்

மாவட்டத்தில், கள்ளச்சாராயம், போதைப்பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்வதற்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். இது தொடர்பாக, சென்னை மத்திய புலனாய்வு பிரிவுக்கு 10581 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலும் 9498410581 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக கலால் பிரிவுக்கும் 04146-225431 என்ற தொலைபேசி எண்ணிலும், பொது மக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கலாம். புகார் தெரிவிப்பவர்கள் குறித்த விவரம் ரகசியமாக வைக்கப்படும். எனவே, பொதுமக்கள் கள்ளச்சாராயம், போதைப்பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் ஆகியவற்றின் பயன்பாட்டை முற்றிலுமாக தடுப்பதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அறிவுறுத்தப்படுகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை