மேலும் செய்திகள்
அணையில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும்
30-Apr-2025
செஞ்சி: விழுப்புரம் மாவட்ட ஏரிகளில் நீர் மட்டம் குறைந்திருப்பதால் தென்மேற்கு பருவ மழை துவங்குவதற்கு முன்பு வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில் நீர் வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளங்களில், விவசாயிகள் வண்டல் மண்ணையும், மண்பாண்டம் செய்பவர்கள் களிமண்ணையும் எடுப்பதற்கு கடந்த ஆண்டு வரை மாவட்ட கலெக்டர்கள் அல்லது அவர்களால் நியமிக்கப்படும் மாவட்ட வருவாய் அலுவலர், சப் கலெக்டர்கள் அனுமதி வழங்கி வந்தனர்.இதனால் விவசாயிகள் வீண் அலைச்சலுக்கு ஆளானதால் தமிழக அரசு கடந்த ஆண்டு தாசில்தார்கள் மூலம் கட்டணம் இன்றி அனுமதி வழங்குவதற்கான அரசாணையை வெளியிட்டது. இதற்கான விண்ணப்பத்தை ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் தனி செயலிகளை தமிழக அரசு உருவாக்கியது.இதன் மூலம் நஞ்சை நிலத்திற்கு ஏக்கருக்கு 25 யூனிட், புஞ்சை நிலங்களுக்கு 30 யூனிட், மண்பாண்டம் செய்பவர்கள் 10 யூனிட் ஏரிகளில் மண் எடுக்க அனுமதி வழங்கி வருகின்றனர். இதில் விவசாயிகள், மண்பாண்டம் செய்பவர்கள் பயணடைவதுடன், ஏரி, குளங்களும் ஆழம் அதிகாரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.ஏரிகளில் மண் எடுப்பதற்கான அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பு ஏரிகளை பராமரித்து வரும் நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சித்துறையினரிடம், புவியியல் மற்றும் சுரங்கத்துறையினர் பட்டியல் பெறுகின்றனர். இதன் பிறகு ஏரிகளை ஆய்வு செய்து மண் எடுப்பதற்கு தகுதியான ஏரிகளின் பட்டியலை கலெக்டருக்கு பரிந்துரை செய்கின்றனர். இந்த பரிந்துரையின் அடிப்படையில் ஏரிகளில் மண் எடுக்க அனுமதி வழங்குகின்றனர்.வழக்கமாக கோடைகாலத்தில் இதற்கான் அனுமதி வழங்குவர். இந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில், விவசாயிகள் 2ம் கட்ட அறுவடை முடித்து பெரும்பாலான நிலங்களை கரம்பாக வைத்துள்ளனர்.வழக்கமாக மூன்றாம் கட்ட சாகுபடியை துவங்கும் முன் வண்டல் மண் நிரப்பி, விவசாய நிலத்தின் மண் வளத்தை அதிகரிப்பதை விவசாயிகள் வழக்கமாக பின்பற்றி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயலால் ஏரிகள் நிரம்பி இருந்தன. ஏரிகளில் தண்ணீர் இருந்ததால் இதுவரை வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கவில்லை. கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கும் கோடை வெயிலால் மாவட்டத்தில் பெரும்பாலான ஏரிகளில் தண்ணீர் குறைந்து விட்டது.வண்டல் மண் எடுப்பதற்கு தகுதியான நிலையில் 70 சதவீதம் அளவிலான ஏரிகள் வந்து விட்டது. வழக்கமாக தமிழகத்தில் ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். இதனால் மீண்டும் ஏரிகளுக்கு தண்ணீர் வந்து விடும்.அத்துடன் மே மாதத்தில் திடீரென கோடை மழையும் வெளுத்து வங்க வாய்ப்புள்ளது. எனவே மாவட்டத்தில் தண்ணீர் இன்றி உள்ள ஏரிகளில் இருந்து விவசாயிகள் வண்டல் மண் எடுப்பதற்கு மாவட்ட கலெக்டர் அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வண்டல் மண் அனுமதியை சிலர் முறைகேடாக பயன்படுத்தி செங்கல் சூளைகளுக்கு மண் எடுக்கின்றனர். ஏரிகளில் அளவுக்கு அதிகமாக மண் எடுக்காமல் இருப்பதை நீர்வளத்துறை, ஒன்றிய நிர்வாகமும் பணியாளர்களை நியமித்து காண்காணிக்க வேண்டும். செங்கல் சூளைகளுக்கு மண் கொண்டு வருவதை வி.ஏ.ஓ., கிராம உதவியாளர்கள் கண்காணிக்க வேண்டும். உயரதிகாரிகளின் அனுமதியுடன், மண் கடத்தல் நடக்கும் போது வி.ஏ.ஓ., கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டுகொள்ளால் விட்டு விடுகின்றனர். எனவே இதை தடுக்க மாவட்ட கலெக்டர் உரிய வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும்.
30-Apr-2025