| ADDED : ஜூன் 09, 2024 02:46 AM
ராஜபாளையம், : மாவட்டத்தில் திறந்த வெளியில் செப்டிக் டேங்க் கழிவுகளை வாகனங்களில் இருந்து கொட்டுவதால் சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது.ராஜபாளையம் நகராட்சியில் 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை இருந்து வரும் நிலையில் குடியிருப்புகளில் சேகரமாகும் மனித கழிவுகளை அகற்றுவதற்கு 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் வீடுகள், அலுவலகங்களில் உள்ள செப்டிக் டேக்குகளின் கழிவுகளை வாகனங்களின் மூலம் நகர் பகுதியில் தொலைதுாரம் திறந்த வெளியில் கொட்டி வந்தனர்.இந்நிலையில் கடந்த சில நாட்களாக ராஜபாளையத்தில் இருந்து வெகு தொலைவு கொண்டு செல்வதை சிரமமாக கருதி நகரை ஒட்டியுள்ள கண்மாய்களில் திறந்து விடுவது நடைபெறுகிறது.நகராட்சி சார்பில் மனித கழிவுகளை அகற்றுவதற்கு விதிமுறை, கட்டணம் வகுத்து தந்தும் விழிப்புணர்வு கூட்டம் போட்டும் விதிமீறல் பகலிலேயே நடந்து வருகிறது.இதனால் கண்மாய் பாசன நீர் நேரடியாக மனித கழிவுகள் கலந்து துர்நாற்றத்துடன் மாறுவதால் பயிர்கள், பாசனம் மேற்கொள்பவர்கள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.நகராட்சி நிர்வாகம் விதி மீறலில் ஈடுபடுபவர்கள் களை கண்காணிப்பதும், அபராதம் விதித்து கழிவு மேலாண்மை மேற்கொள்வதிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.இதை காரணமாக பயன்படுத்தி ராஜபாளையம் நகரை ஒட்டியுள்ள கடம்பன் குளம், கருங்குளம், புளியங்குளம், பிரண்ட குளம், கொண்டனேரி கண்மாய் உள்ளிட்ட பகுதிகளில் செப்டிக் டேங்க் கழிவுகளை கொட்டி செல்கின்றனர்.பாசனத்திற்கு செல்லும் தண்ணீரில் நேரடியாக மனித கழிவுகளை கலப்பவர்கள் மீது நகராட்சியின் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.