| ADDED : மே 30, 2024 02:05 AM
மாவட்டத்தில் அருரப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, சாத்துார், காரியப்பட்டி, ஸ்ரீவில்லிப்புத்துார், ராஜபாளையம் ஆகிய நகர் பகுதிகள், பள்ளி, கல்லுாரி அமைந்துள்ள இடங்கள், நான்கு வழிச்சாலை, புறநகர், ஊரகப்பகுதிகள் வழியாக செல்லும் நெடுஞ்சாலைகளில் அடிக்கடி வாகன விபத்துக்கள் நடக்கிறது. இந்த விபத்துக்களால் தினமும் பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது போன்று விபத்தில் சிக்கியவர்கள் தங்களின் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து வாடும் நிலைக்கு ஆளாகின்றனர். மேலும் விபத்தை ஏற்படுத்தியவர்களை அடையாளம் காண்பதிலும் சிக்கல் உள்ளது. இச்சம்பவங்கள் நடந்த பகுதிகளில் சி.சி.டி.வி., கேமராக்கள் இல்லாத போது அருகே எங்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதில் சிரமம் உள்ளது.மேலும் வாகன திருட்டு, குற்றச்சம்பவங்களும் அதிகரித்து வருவதாலும் வாகன விதிமீறலில் ஈடுபடுபவர்களை துரிதமாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது. இதனால் மக்கள் வெளியே செல்லும் போது ஒவ்வொரு முறையும் அச்சத்துடன் பயணிக்க வேண்டியுள்ளது.இந்நிலையில் சென்னையில் வாகன விபத்துக்கள் அதிகம் நடக்கும் பகுதிகள், திருட்டு சம்பவங்கள் நடைபெறும் இடங்களில் ரோட்டில் வாகனங்களின் வேகங்களை குறைப்பதற்காக வைக்கப்பட்டுள்ள பேரிகார்டுகளில் ஏ.என்.பி.ஆர்., என்ற தானியங்கி நம்பர் பிளேட் எண்களை கண்டறியும் கேமராக்களை பொருத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர்.இதனால் ரோட்டில் சாகசம், குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், திருட்டு வாகனங்களின் நம்பரை பதிவு செய்து துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலும் வாகன திருட்டு, டூவீலர் பந்தயம், சாகசங்கள், விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்டத்தில் ஏ.என்.பி.ஆர்., கேமராக்களை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.