| ADDED : ஜூன் 01, 2024 03:59 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் நாளை (ஜூன் 2) கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனால் நாளை கனரக வாகனங்கள் மாற்றுப் பாதையில் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.நாளை காலை 7:45 மணி முதல் 8:45 மணிக்குள் ராஜகோபுரம் மற்றும் அனைத்து விமான கோபுரங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையடுத்து மகாபிஷேகம், அலங்காரம், தீபாரதனை நடக்கிறது. இரவு 6:00 மணிக்கு மேல் திருக்கல்யாணம் மற்றும் பஞ்சமூர்த்தி வீதி உலா நடக்கிறது.கோயிலை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.நாளை காலை முதல் ராஜபாளையத்தில் இருந்து வரும் கனரக வாகனங்கள் புதுப்பட்டி, மம்சாபுரம், கம்மாபட்டி, ஆத்து கடை, ராமகிருஷ்ணாபுரம் வழியாக செல்ல வேண்டும். பயணிகள் பஸ் போக்குவரத்து வழக்கமான வழித்தடத்தில் இயங்கும். ராஜபாளையத்தில் இருந்து வரும் பக்தர்களின் நான்கு சக்கர வாகனங்கள் மடவார்வளாகம் தெற்கு பக்கம் உள்ள நெற்களத்தின் காலி இடத்திலும், ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றியுள்ள கிராமங்கள், கிருஷ்ணன் கோவில், மல்லி, சிவகாசி பகுதியில் இருந்து வரும் நான்கு சக்கர வாகனங்கள் வி.ஆர்.என். பகுதியில் பார்க்கிங் செய்ய வேண்டுமென போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.