| ADDED : ஆக 19, 2024 07:09 AM
ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அணைத்தலை ஆற்றை அடுத்து ராக்காச்சி அம்மன் கோவில் செல்லும் வழியில், விரியன் கோவில் பீட் அழகர் காடு பகுதியில் நுாற்றுக்கணக்கான ஏக்கர் தென்னை, மா மர தோப்புகள் உள்ளன. இதில், ராஜபாளையத்தைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் கணபதி சுந்தரநாச்சியார்புரத்தைச் சேர்ந்த காவலாளி துரைபாண்டி, 60, மான், பன்றி உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக சட்டவிரோத மின் வேலி அமைத்திருந்தார்.இந்த மின்வேலியில், வனப்பகுதியில் இருந்து உணவு தேடி வந்த, 15 வயது ஆண் யானை சிக்கி உயிரிழந்துள்ளது. இந்த விஷயம் நேற்று காலை, 10:00 மணிக்கு தெரிந்தது. ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் தலைமையிலான வனத்துறையினர், கால்நடை மருத்துவர்கள் விசாரித்தனர். யானை இறப்புக்கு காரணமாக தோப்பு காவலாளி துரைபாண்டியை போலீசார் கைது செய்தனர்.