| ADDED : ஜூலை 19, 2024 06:26 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் உழவர் சந்தை அருகே உள்ள மீன் மார்க்கெட்டை, சர்க்கரைகுளம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள காய்கறி சந்தைக்கு இடமாற்றம் செய்வதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பக்தர்களும் அதிருப்தியடைந்துள்ளனர்.உழவர் சந்தை அருகே அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், சுகாதார கேடுகளுடன் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.இதனை ஸ்ரீவில்லிபுத்துார் நம்பி நாயுடு தெருவில் சர்க்கரைகுளம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள காய்கறி சந்தைக்கு இடமாற்றம் செய்ய நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கு குடியிருப்பு அருகே அமைப்பதால் மீன் கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதோடு, நோய்களுக்கும் ஆளாக வேண்டியுள்ளது.மேலும் ஆண்டாள் கோயில் எதிரிலேயே மீன் மார்க்கெட் அமைப்பது பக்தர்களை வருத்தமடைய செய்துள்ளது. இதனால் மீன் மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென மக்கள் விரும்பகின்றனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் நகராட்சி நிர்வாகம் கைவிடவேண்டும் என மனு அளித்துள்ளனர்.இது குறித்து பா.ஜ.,மாவட்ட தலைவர் சரவணதுரைராஜா கூறுகையில், சர்க்கரை குளம் தெருவில் உள்ள நீராவி மண்டபத்தில் பத்து நாள் வசந்த உற்சவமும், ஐந்து வருட சேவையின் போது திருத்தங்கள் அப்பனும் இங்குள்ள மண்டபத்தில் எழுந்தருவது வழக்கம். மேலும் இப்பகுதியில் நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம், அம்மா உணவகம் உள்ள நிலையில், புதிதாக கட்டப்பட்டுள்ள காய்கறி சந்தைக்கு, மீன் மார்க்கெட்டை இடமாற்றம் செய்வது மக்கள் நலனுக்கு உகந்ததல்ல.எனவே, மீன் மார்க்கெட்டை, உழவர் சந்தையின் உட்பகுதிக்குள் இடமாற்றம் செய்வதே சரியானதாக இருக்கும். அதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்ப்பையும் மீறி செயல்படுத்தினால் போராட்டம் நடத்துவோம் என்றார்.