| ADDED : ஜூன் 29, 2024 05:02 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் கனவு இல்லம் திட்டத்திற்கு பயனாளிகள் தேர்வு செய்வது தொடர்பாக எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதால், தங்கள் பெயர் விடுபட்டிருக்குமோ என வீடு தேவை உள்ள, பங்கேற்காதவர்கள் புலம்பும் சூழல் உள்ளது.மாவட்டத்தில் கனவு இல்லம் திட்டத்திற்கு பயனாளிகள் தேர்வு செய்வது தொடர்பாக சிறப்பு கிராமசபை கூட்டம் நடத்த மூன்று நாட்களுக்கு முன் அந்தந்த ஊராட்சி நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி நேற்று கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இது குறித்து முன்பே மக்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தாலும், அது நிறைய பகுதிகளை சென்றடையவில்லை.இதனால் தகவல் சேராதவர்கள் சிரமப்பட்டனர். மேலும் இத்திட்டத்தில் கட்சியை சேர்ந்தவர்கள், ஊராட்சி தலைவர்களுக்கு வேண்டப்பட்டவர்கள் பாகுபாடு கொண்டும் பயனாளிகள் பட்டியலில் பெயர்கள் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. இது குறித்து முன்னறிவிப்பு ஏன் நாளிதழ்கள் வாயிலாக வெளியிடவில்லை என மக்கள் புகார் கூறுகின்றனர். மேலும் ஊராட்சிகளில் சில பகுதிகளில் நிர்வாகங்கள் தரப்பில் எந்த அறிவிப்பும் விடப்படவில்லை என்று கூறுகின்றனர்.இதனால் நுாறு சதவீதம் சரியான பயனாளிகள் தான் தேர்வு செய்யப்பட்டனரா என தெரியாத சூழல் உள்ளது. இந்த சிறப்பு கிராமசபை கூட்டத்தை ஊராட்சி தலைவர்கள் சிலர் சுயலாபத்திற்கும் பயன்படுத்தும் வாய்ப்புள்ளது.எனவே கனவு இல்ல திட்ட பயனாளிகள் பட்டியலை மாவட்ட நிர்வாகம் சரிபார்த்து தான் மாநில தலைமைக்கு அனுப்ப வேண்டும். ஏற்கனவே பிரதமர் வீடு கட்டும் திட்டம், முதியோர் உதவி தொகை என பல சமூக பாதுகாப்பு திட்டங்களில் முறைகேடு நடந்துள்ளது. எனனே கனவு இல்ல திட்டத்தையாவது முறைப்படி நடத்த வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.