உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாவட்டலஞ்ச ஒழிப்புத்துறையில் 10 ஆண்டுகளில் 106 வழக்குகள் முறைகேட்டை கட்டுப்படுத்த இன்னும் தீவிரம் அவசியம்

மாவட்டலஞ்ச ஒழிப்புத்துறையில் 10 ஆண்டுகளில் 106 வழக்குகள் முறைகேட்டை கட்டுப்படுத்த இன்னும் தீவிரம் அவசியம்

லஞ்ச ஒழிப்புத் துறை தமிழக அரசின் மனிதவள மேலாண்மைத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதைத் தடுக்கவும், ஊழலில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து வழக்குப் பதிவு செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரும் அமைப்பாக உள்ளது. மேலும் அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்களில் நடக்கும் லஞ்சம், ஊழல்கள் குறித்து புகார்கள் வந்தால், அதனை விசாரணை செய்வதோடு, லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல், ஊழலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை செய்தல் போன்ற பணிகளையும் செய்கிறது. ஆனால் விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் மிகக் குறைவான அளவே லஞ்ச வழக்குகள் பதியப்பட்டுள்ளது. பத்திரப் பதிவுத்துறை, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், வருமான வரித்துறை, வணிகவரித்துறை, போலீஸ் ஸ்டேஷன்கள் என அரசுத்துறை சார்ந்த பகுதிகளில் தற்போது லஞ்ச லாவண்யங்கள் பெருகி உள்ளது. இது குறித்து மக்கள் தொடர்ந்து புகார் அளிக்கின்றனர். ஆனால் நடவடிக்கைகள் தான் போதுமானதாக இல்லை. இந்நிலையில் 10 ஆண்டுகளில் 106 வழக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது. விருதுநகரைச் சேர்ந்த உமாராணி என்பவர் லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பல தகவல்களை கேட்டிருந்தார். அதற்கு சம்மந்தப்பட்ட அலுவலகத்திலிருந்து பதில் வந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 2014 முதல் தற்போது வரை எத்தனை லஞ்சம் மற்றும் ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு, 106 வழக்குகள் என பதில் வழங்கப்பட்டுள்ளது. எத்தனை பேர் தண்டனை பெற்றுள்ளனர் என கேட்டதற்கு, 29 வழக்குகளில் 46 பேர் மட்டுமே தண்டனை பெற்றுள்ளதாக தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்குகள் இவ்வளவு குறைவாக பதியப்பட்டுள்ள நிலையில், யதார்த்தத்தில் லஞ்சம் தலை விரித்தாடுகிறது. அரசுத் திட்டங்கள், நோக்கங்கள் குறித்து வெளிப்படைத் தன்மையுடன் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். லஞ்சம் தொடர்பான புகார்களை அளிப்போருக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அதே போல் லஞ்ச ஒழிப்பு துறைக்கான பணியிடங்களை இன்னும் அதிகரித்தால் நிச்சயம் லஞ்சத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியும். ஆய்வுகளோடு நின்று விடாமல், ஆதாரங்களுடன் பிடிக்க தான் போலீசார் முயற்சிக்கின்றனர். இருப்பினும், சிலர் முன்கூட்டியே தகவல் பெற்று தப்பி விடுவதால் போதிய ஆதாரங்கள் சேகரிக்க முடியாமல் வழக்கு பதிய முடியாமல் போகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் லஞ்ச ஒழிப்புத்துறையை பலப்படுத்த வேண்டும். சாமனிய மக்கள் மனம் நிறைவு பெற லஞ்சம் பெறுவோர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை