லாரி - பஸ் மோதலில் 16 பயணியர் படுகாயம்
விருதுநகர்: கன்டெய்னர் லாரியின் பின்னால் அரசு பஸ் மோதியதில், கண்டக்டர் உட்பட 17 பேர் காயம் அடைந்தனர். திருப்பூரில் இருந்து, 40க்கும் மேற்பட்ட பயணியருடன் நாகர்கோவில் நோக்கி சென்ற அரசு பஸ்சை, டிரைவர் சுதர்சிங், 52, ஓட்டினார். கண்டக்டராக மனவிளை பவுல்ராஜ், 52, இருந்தார். விருதுநகர் மாவட்டம், சாத்துார் எட்டூர்வட்டம் டோல்கேட் அருகே நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு சென்ற பஸ், கட்டுப்பாட்டை இழந்து, கொல்லம் நோக்கி சென்ற கன்டெய்னர் லாரியின் பின்னால் மோதியது. இதில், பஸ்சின் முன்பகுதி முழுதும், லாரியின் பின்பகுதியும் சேதமானது. கண்டக்டர் பவுல்ராஜ், பயணியர் 16 பேர் படுகாயமடைந்து, சாத்துார், விருதுநகர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.