| ADDED : டிச 01, 2025 06:29 AM
இ யற்கை மனிதனுக்கு பல்வேறு பயனுள்ள வளங்களை அளித்து வருகிறது. அந்த வகையில் மரங்கள் பொது இடங்கள், ரோடு ஓரங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பகுதிகளில் வளர்க்கப்படுகின்றன. இதனால் குளிர்ச்சியான சூழலையும் நீர் நிலைகள் வளம் பெறவும் உதவுகின்றன. கிராமப்புறங்களில் இயற்கையான சூழலில் மக்கள் வசிக்கின்றனர். நகரங்களில் இயற்கையான சூழல் கிடைப்பது அரிது. நகர் புறம் மக்களின் காலை மாலை நேரங்களில் அமைதியான சூழலை விரும்புவர்களுக்கும், நடைப்பயிற்சி செய்பவர்களுக்கும் பொது இடங்களில் பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன. இதில் நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் பூங்காக்களை அமைத்து பராமரித்து வருகிறது. புதிய பூங்காக்களை உருவாக்கியும் அதில் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு உபகரணங்களையும் ஏற்படுத்தி வருகின்றன. இவற்றில் பயனுள்ள மரங்கள், பூஞ்செடிகள் புல்வெளிகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு குளுமையான சூழலை ஏற்படுத்தி மக்களுக்கு பயனுள்ள வகையில் செய்யப்படுகின்றன. அந்த வகையில் அருப்புக்கோட்டையில் நகராட்சி மூலம் நகரின் பல்வேறு பகுதிகளில் 7க்கும் மேற்பட்ட பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே உள்ள பழையவை சீரமைக்கப்பட்டு புதியதாக மேம்படுத்தப்படுகின்றன. அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் மயான ரோடு, காந்திநகர் சர்வீஸ் ரோடு பகுதியில் பூங்காக்கள் புதியதாக அமைக்கப்பட்டு அவற்றில் மரங்கள் பல்வேறு வகையான நிறங்களில் பூக்கும் பூஞ்செடிகள், புல்வெளிகள், நீரூற்று, குழந்தைகள் விளையாட விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்டவை அமைக்கப் பட்டுள்ளது. இவற்றை முறையாக பராமரிப்பு செய்ய பணியாளர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். காலை மாலை நேரங்களில் நடை பயணம் செய்பவர்கள் ரோடுகள், பள்ளி மைதானங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தேடிச் செல்லும் மக்கள் புதிய பூங்காக்களில் நடைப்பயிற்சி செய்யவும், இளைப்பாறவும் வசதியாக உள்ளது.