உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கரும்புகளை பிற மாவட்ட சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்புவதில் உத்தரவு வந்தும் தொடரும் குழப்பம் முத்தரப்பு கூட்டத்தை விரைந்து  நடத்த எதிர்பார்ப்பு

கரும்புகளை பிற மாவட்ட சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்புவதில் உத்தரவு வந்தும் தொடரும் குழப்பம் முத்தரப்பு கூட்டத்தை விரைந்து  நடத்த எதிர்பார்ப்பு

விருதுநகர்: விருதுநகர், தென்காசி மாவட்ட கரும்புகளை சிவகங்கை, தேனி மாவட்ட சர்க்கரை ஆலைகளுக்கு அரவைக்கு செல்ல சர்க்கரைத்துறை இயக்குனர் அனுமதித்தும், குழப்பம் நீடித்து வருகிறது. விரைந்து முத்தரப்பு கூட்டத்தை நடத்தி அரவைக்கு அனுப்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நிதி நெருக்கடியின் காரணமாக தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லுார் தனியார் சர்க்கரை ஆலை, தனது அரவையை 2021ல் நிறுத்தியது. அந்த ஆண்டு பதிவு செய்த கரும்புகள் அருகில் உள்ள சிவகங்கை, தேனி மாவட்டங்களில் உள்ள இரு சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பப்பட்டது. மூன்று ஆண்டுகளாக இரு ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு வந்தது. 2024 ஜூன் முதல் தென்காசி தனியார் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கி தொகைகள் முழுவதையும் வழங்கிவிடுவதாகவும், வரக்கூடிய 2025ல் தனது அரவையை துவங்க உள்ளதாகவும் கூறினர். இதனடிப்படையில் சிவகங்கை, தேனி மாவட்ட சர்க்கரை ஆலைகள் விருதுநகர், தென்காசி மாவட்ட பகுதிகளில் அரவை நிறுத்திவிட்டு கரும்பு பதிவுகளையும் ரத்து செய்தனர்.தற்போது தென்காசி சர்க்கரை ஆலை பாதி தொகை மட்டும் கொடுத்துள்ளதாகவும், மீத தொகை எப்போது கொடுக்கப்படும் என தெரியாததால் மீண்டும் தங்களது கரும்புகளை வரும் 2025 அரவைக்கு அனுப்ப விவசாயிகள் மறுத்து வந்தனர். இந்நிலையில் தமிழகவிவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திரராஜா, சர்க்கரைத்துறை இயக்குனர், கரும்பு ஆணையாளருக்கு, நவம்பர் முதல் மார்ச் வரை பதிவு செய்த கரும்புகளை தேனி, சிவகங்கை ஆலைகளுக்கு வழங்க உத்தரவிட கோரிக்கை வைத்தார். இந்நிலையில் தென்காசி ஆலை மீத தொகை தரும் வரை சிவகங்கை, தேனி சர்க்கரை ஆலைகளுக்கு கரும்புகளை அனுப்ப உத்தரவிட்டார். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்திருந்தனர்.இந்நிலையில் தனியார் ஆலை தொடர்ந்து செயல்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால் விவசாயிகள் குழப்பமடைந்துள்ளனர். எனவே சர்க்கரைத்துறை ஆணையரின் உத்தரவை பின்பற்றி அறுவடை நடந்து வரும் கரும்புகளை தேனி, சிவகங்கை ஆலைகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மீண்டும் வலியுறுத்தி உள்ளனர். மாவட்ட நிர்வாகம், ஆலை நிர்வாகங்கள் தரப்பு, விவசாயிகளின் முத்தரப்பு கூட்டத்தை விரைந்து நடத்தி விரைவில்அரவையை துவங்க எதிர்பார்த்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை