பஸ்சில் ஸ்டிக்கர் வெளுத்துப் போனதால் ஊர் பெயர் தெரியாமல் பயணிகள் சிரமம்
நரிக்குடி: பஸ்சில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்கள் வெளுத்துப் போனதால் ஊர் பெயர் தெரியாமல் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். தரமான புதிய ஸ்டிக்கர்கள் ஒட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அரசு பஸ்களில் முன், பின் பக்க கண்ணாடியில் ஊர்களின் பெயர்கள் எழுதப்பட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுகின்றன. பயணிகள் எளிதில் படித்து எந்த வழித்தடத்தில் இயங்கும் பஸ் என கண்டறிந்து பயணிக்க ஏதுவாக இருந்து வருகிறது. அதே போல் வெளியூர்களிலிருந்து வரும் பயணிகளுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. இவ்வாறு ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்கள் நாளடைவில் எழுத்துக்கள் மறைந்து, வெறும் ஸ்டிக்கர்கள் மட்டுமே வெளுத்துப் போய் காணப்படுகின்றன. இதனால் பயணிகள் எந்த வழித்தடத்தில் இயங்கும் பஸ் என்பதை கண்டறிய பெரிதும் சிரமப்படுகின்றனர். தற்போது மழைக்காலம் என்பதால் பின்பக்க கண்ணாடியில் சேரும் சகதியுமாக மாறி ஊர் பெயர் தெரியாத அளவிற்கு மறைத்து விடுகின்றன. பயணிகள் பெரும் குழப்பத்தில் பஸ்சை தவிற விடுகின்றனர். மாவட்டத்தில் பெரும்பாலான டெப்போக்களில் உள்ள பஸ்களில் இதே நிலைமை இருந்து வருகிறது. குறிப்பாக காரியாபட்டி பகுதியில் இயங்கும் பஸ்களில் இது போன்ற ஸ்டிக்கர்கள் வெளுத்துப் போய் காணப்படுகின்றன. பயணிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தரமான புதிய ஸ்டிக்கர்கள் ஒட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அதேபோல் ஊர் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ள கண்ணாடி சகதியாக இருப்பதால் பயணிகளுக்கு சரிவர தெரியவில்லை. இதனை தினமும் சுத்தம் செய்து பயணிகள் படித்து தெரிந்து கொள்ள உதவ வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.