| ADDED : செப் 20, 2011 09:30 PM
விருதுநகர்:விருதுநகர் நந்திரெட்டியபட்டி சென்ற பஸ்கள், மோசமான ரோடால்
நிறுத்தப்பட்டதால், பள்ளி செல்லும் மாணவர்கள், தினம் 2 கி. மீ, தூரம்,
காட்டு வழியில் நடந்து செல்கின்றனர். விருதுநகர் அருகே சிவஞானபுரம்
ஊராட்சியில் உள்ளது நந்தியரெட்டியபட்டி. இங்கு கூலித்தொழில் செய்யும் 300
குடும்பத்தினர் உள்ளனர். இங்கு நடுநிலைப்பள்ளி மட்டுமே உள்ளதால், மேல்படிப்பிற்காக அருகிலுள்ள
வடமலைகுறிச்சிக்கு மாணவர்கள் செல்கின்றனர். இங்கு செல்லும் வழியில் கடந்த
சில மாதங்களுக்கு முன், ரோடு போடுவதற்காக கற்கள் பெயர்க்கப்பட்டதால்,இங்கு
வந்த அரசு பஸ்களும் நிறுத்தப்பட்டுள்ளன.ரோடு சரியில்லாததால், மினி பஸ்சும்
வராததால் பொதுமக்கள் வெளியூர்களுக்கு செல்ல முடியாமல் திண்டாடுகின்றனர்.பஸ்
வசதி இல்லாததால், நந்திரெட்டியபட்டியிலிருந்து வடமலைகுறிச்சி பள்ளிக்கு,
தினமும் 2 கி.மீ, தூரம் காட்டு வழியில் நடந்து செல்லும் நிலையில் மாணவர்கள்
உள்ளனர்.பச்சாண்டி கூறுகையில்,''காட்டு பகுதியில் திருடர்கள் பயம் அதிகம்
உள்ளதால், மாணவர்கள் ஐந்து, பத்து பேர் கொண்ட குழுவாக செல்கின்றனர். பஸ்
வசதி கேட்டு பலமுறை மாவட்ட நிர்வாகம், போக்குவரத்து துறை அதிகாரியிடம் மனு
கொடுத்தும் நடவடிக்கை இல்லை,'' என்றார்.