| ADDED : அக் 02, 2011 08:49 PM
பழநி :முதல்வர் ஜெ., பிறந்த நாளில், 64 லட்சம் மரக்கன்றுகளை நட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கன்றுகளை வினியோகிக்க, தனியார் நர்சரிகளை வனத்துறையினர் நாடி வருகின்றனர்.அடுத்தாண்டு பிப்ரவரியில் (முதல்வர் ஜெ., பிறந்த நாள் பிப்., 24), தமிழகம் முழுவதும் அதிகளவு மரக்கன்றுகளை நட அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த 'பசுமையாக்கும் திட்டம்' மூலம் 32 மாவட்டங்களில் 64 லட்சம் மரக்கன்றுகள் நட அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, அரசு 29.44 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டத்தில் நிழல் தரும், பழ மரக்கன்றுகளை, அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் நட வேண்டும். இதற்கான மரக்கன்றுகள் தொடர்பாக, 80 வகை மரக்கன்றுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. நடவு செய்யும்போது, ஒரு மீட்டர் உயரமுள்ள கன்றுகளாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதற்காக கன்றுகளை தயார் செய்யும் பணியை தற்போது துவக்கினாலும், ஐந்து மாதங்களில் குறிப்பிட்ட அளவு உயரத்திற்கு அனைத்து கன்றுகளையும் வளர்ப்பது சாத்தியமில்லை.எனவே தனியார் நர்சரிகளில் மொத்த 'ஆர்டர்'கள் கொடுத்து, மரக்கன்றுகள் வாங்கப்பட உள்ளது. இதற்காக, தனியார் நர்சரிகளை வனத்துறையினர் நாடத்துவங்கியுள்ளனர்.