| ADDED : செப் 06, 2011 11:58 PM
மதுரை: ''தொட்டிலில் இடும் குழந்தைகள் குறித்து பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும்,'' என மதுரை தேவதாஸ் சிறப்பு மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் தெய்வேந்திரன் கூறியுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: குழந்தை வளர்ப்பில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளை தங்கள் கண்பார்வையில் வைத்து பாதுகாக்க வேண்டும். தொட்டிலில் இடும்போதும் கழுத்தில் இறுக்கமான கயிறுகள் அணிவதை தவிர்க்க வேண்டும். மதுரை கே.புதூர் சூரியாநகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் 9 மாதக் குழந்தை தொட்டிலில் இருந்து தானாக கீழே இறங்கியபோது, அதன் கழுத்தில் அணிந்திருந்த தாயத்து கயிறு தொட்டிலில் சிக்கியது. குழந்தையின் தொண்டையை அக்கயிறு இறுக்கியதை யாரும் கவனிக்கவில்லை. குழந்தையின் சுவாசம் தடைபட்டு மயக்க நிலைக்கு ஆளானது. உடல் நீலநிறமாகிவிட்டது. அதன் பிறகே அக்குழந்தையை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்ட பின், குழந்தை மீட்கப்பட்டது. எனவே தொட்டிலில் இடும் குழந்தைகள் மீது பெற்றோர் கவனமாக இருப்பது அவசியம், என்றார்.