| ADDED : ஜூலை 02, 2024 05:23 AM
ராமேஸ்வரம் : ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன், நம்புதாளையை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் 25 பேர், ஜூன் 30ல் பாக் ஜலசந்தி கடலில் மீன்பிடித்தனர். அங்கு கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள், துப்பாக்கி முனையில் மூன்று பாம்பன் படகுகள், நம்புதாளையை சேர்ந்த ஒரு நாட்டுப்படகை பிடித்தனர். இப்படகில் இருந்த மீனவர்கள் இருதயராஜ், 47, உள்ளிட்ட 25 பேரை கைது செய்து காங்கேசன் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் பாம்பன் மீனவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.கைதான மீனவர்களை விடுவிக்கக் கோரி, நேற்று காலை, 8:00 மணிக்கு பாம்பன் கடலில் இறங்கி மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின், ஊர்வலமாக புறப்பட்டு பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் மறியல் செய்தனர். ஆர்.டி.ஓ., ராஜமனோகரன், கூடுதல் எஸ்.பி., காந்தி, டி.எஸ்.பி., உமாதேவி ஆகியோர் மீனவர்களை சமாதானம் செய்து, மறியலை கைவிட செய்தனர்.ஒன்றரை மணி நேரம் நடந்த மறியலால் ராமேஸ்வரம் - மதுரை இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.