உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலியாக கோர்ட் உத்தரவு தயாரிப்பு மூவருக்கு தலா 6 மாத சிறை தண்டனை

போலியாக கோர்ட் உத்தரவு தயாரிப்பு மூவருக்கு தலா 6 மாத சிறை தண்டனை

சென்னை:போலியாக கோர்ட் உத்தரவை தயாரித்த வழக்கில், மூன்று பேருக்கு தலா ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ரங்கம்மாள் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில், அமல்ராஜ், சண்முகம், முருகானந்தம் ஆகியோர் வசித்தனர். இடத்தை காலி செய்யும்படி அறிவுறுத்தியும், அவர்கள் காலி செய்யாததால், அறக்கட்டளை நிர்வாகி செந்தாமரை, நாமக்கல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சாதகமான உத்தரவு வரவே, நீதிமன்ற ஊழியர்களுடன் சென்றுள்ளார். அப்போது, உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றிருப்பதாக, அதன் நகலை முருகானந்தம் அளித்தார். இதையடுத்து, போலியாக நீதிமன்ற உத்தரவை அளித்ததாக, நாமக்கல் போலீசில் செந்தாமரை சார்பில் புகார் அளிக்கப்பட்டது; உயர் நீதிமன்ற பதிவாளரிடமும் புகார் தரப்பட்டது. போலி உத்தரவை தயாரித்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்ககக் கோரி, உயர் நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, முருகானந்தம் உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக, உயர் நீதிமன்றமே தாமாக முன்வந்து, அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தது. போலி உத்தரவு தயாரித்தது தொடர்பாக, சிறப்பு குழு அமைத்து விசாரிக்க, டி.ஜி.பி.,க்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அவமதிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டிருந்த மெய்யப்பன் என்பவர் சார்பில், வழக்கறிஞர் எஸ்.சங்கர் ஆஜராகி, ''போலி உத்தரவு வழங்கியதில் அவருக்கு தொடர்பு இல்லை,'' என்றார்; பதில் மனுவும் தாக்கல் செய்தார்.இதையடுத்து, மெய்யப்பன் உள்ளிட்ட இருவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை என்பதால், அவர்களை விடுவித்தும், முருகானந்தம், சண்முகம், அமல்ராஜ் ஆகியோருக்கு தலா ஆறு மாதம் சிறை தண்டனை விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை