| ADDED : ஜூன் 18, 2024 06:11 AM
ஓமலுார் : கஞ்சநாயக்கன்பட்டியில், இரண்டாவது நாளாக சிறுத்தையை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.சேலம் மாவட்டம், டேனிஷ்பேட்டை வனச்சரகத்துக்குட்பட்ட எலத்துார், குண்டுக்கல், ராமசாமிமலை ஆகிய காப்புக்காடுகளில், இளம் பெண் சிறுத்தை ஒன்று உலா வருகிறது. ஆங்காங்கே சிறிய சிறிய கரடுகளாகவும், சமதள பரப்புகளை கொண்டதாகவும் உள்ள அந்த இடம் ஏற்றதாக இருப்பதால், பெண் சிறுத்தை தினந்தோறும், கிடைத்த உணவை வேட்டையாடி வாழ்ந்து வருகிறது. இப்பகுதியில், 24 இடங்களில் கால்நடைகளை சிறுத்தை கடித்துள்ளது.அவற்றை பிடிக்க இரண்டு முறை, நான்கு இடங்களில், கூண்டுகள் வைத்து காத்திருந்த போதும் சிக்கவில்லை.அடிக்கடி இடம் பெயர்வதால் வனத்துறையினராலும் கண்காணிக்க முடியவில்லை. ட்ரோன் மூலமும் தென்படவில்லை. இதனால், அடிவாரத்தில் வசிக்கும் கிராம மக்கள் சிறுத்தை வருமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.இந்நிலையில், காடையாம்பட்டி தாலுகா கஞ்சநாயக்கன்பட்டி மலைக்கோவில் அடிவார பகுதியில், சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கிராம மக்கள் தெரிவித்ததால், இரண்டாவது நாளாக நேற்று. டேனிஷ்பேட்டை ரேஞ்சர் தங்கராஜ் தலைமையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.ஆனால் சிக்காமல், கண்ணாமூச்சி காட்டி வரும் சிறுத்தையால் வனத்துறையினரும், கிராம மக்களும் கலக்கத்தில் உள்ளனர். நேற்று முன்தினம் தோட்டங்களில் பதிந்திருந்த கால் தடங்கள், சிறுத்தை கால் இல்லை என்றும், அதில் நகம் பதிந்துள்ளதால் நாய்களாக இருக்கக்கூடும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.