| ADDED : ஜூன் 15, 2024 10:37 PM
சென்னை:இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக, அ.தி.மு.க., அறிவித்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன், அ.தி.மு.க., ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என, பழனிசாமி எடுத்திருக்கும் முடிவு, கட்சியை முற்றிலுமாக அழிக்கும் முயற்சி. தி.மு.க., அராஜகம் செய்கிறது எனக் கூறி தேர்தல் புறக்கணிப்பு என்றால், 2026ல் இதேபோல் தி.மு.க.,விற்கு பயந்து மொத்தமாக தேர்தலை புறக்கணிக்க தயாராகி விட்டாரா?இடைத்தேர்தலில் கலவரமான சூழ்நிலை ஏற்பட்டதால், ஒரு இடைத்தேர்தலை ஜெயலலிதா புறக்கணித்தார். அதன்பின் இனி இடைத்தேர்தல் புறக்கணிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை எனக் கூறி, திருச்செந்துார், வந்தவாசி இடைத்தேர்தல்களை சந்தித்தார்.என்னிடம் இரட்டை இலை, கட்சி இருக்கிறது. இரண்டு சதவீத ஓட்டுகளை அதிகமாக பெற்றுள்ளோம் எனக் கூறுபவர் செய்த காரியம் வேடிக்கையாக உள்ளது. கட்சிக்கு மிகப்பெரிய சோதனை காலம் ஏற்பட்டுள்ளது. ஒருங்கிணைந்தால்தான் வெற்றி பெற முடியும். இல்லை என்றால் தொடர் தோல்விகள் ஏற்படும். டிபாசிட் போய் விடும் என்பதை தெரிந்து, பழனிசாமி தேர்தலை புறக்கணித்து விட்டார். அ.தி.மு.க., தொண்டர்கள், பொது மக்கள் எண்ணங்களுக்கு ஏற்ப, ஒற்றுமை ஏற்பட வேண்டும். ஓரணியில் நின்று தேர்தலில் போட்டியிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.