| ADDED : ஜூன் 11, 2024 12:00 AM
மதுரை : திருச்சி ஸ்ரீரங்கம் கோபாலகிருஷ்ணன் உயர்நீதி மன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், ஆனி மாதம் ராமலிங்க பிரதிஷ்டை பிரம்மோற்சவம் ஆகம விதிப்படி, 10 நாட்கள் நடைபெற வேண்டும். இது, கோவில் தல வரலாற்றை விளக்கும் உற்சவம். கடந்த ஆண்டுகளில் ஆனியில் மூன்று நாட்கள் மட்டுமே உற்சவம் நடந்தது. தற்போது ஜூன் 10 முதல் 12 வரை நடைபெறும் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது ஆகமம், சம்பிரதாயத்திற்கு எதிரானது. பிரம்மோற்சவத்தை 10 நாட்கள் நடத்தக் கோரி, ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர், கோவில் இணைக் கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.இவ்விவகாரத்தில் தற்போதைய நிலை குறித்து, ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர், கோவில் இணைக் கமிஷனர் ஜூன் 18ல் அறிக்கை தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு உத்தரவிட்டது.