சிவகாசி:விருதுநகர் மாவட்டம், சிவகாசி பாவடி தோப்பு பகுதியில் நடந்த கூட்டத்தில், விருதுநகர் தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் விஜயபிரபாகரனை ஆதரித்து பழனிசாமி பேசியதாவது:அ.தி.மு.க., தலைவர்களுக்கு வாரிசுகள் கிடையாது. கட்சியை சேர்ந்த தொண்டர்கள் தான் பிள்ளைகள். அ.தி.மு.க.,வை அழிக்க நினைத்தவர்கள் அடையாளம் இன்றி போய்விட்டனர்.கூட்டணியை நேசிக்கக் கூடிய கட்சி எங்களுடையது. ஆனால், தி.மு.க.,வில் சீட்டை கொடுத்து விட்டு கூட்டணி கட்சி வேட்பாளரை அழ வைக்கின்றனர். தி.மு.க.,விற்கு மற்றவர்களை வாழ வைத்த சரித்திரமே கிடையாது.அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்தவர்களை கைகொடுத்து உயர்த்தி உள்ளோம். முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி செல்லுமிடமெல்லாம் என்னை பற்றி தான் பேசுகின்றனர். இருவருக்கும் துாக்கம் போய்விட்டது.ஒரு முறை தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலின் பேசும் போது, 'இரவில் துாங்கி காலை கண்விழிக்கிற போது கட்சியினரிடையே என்ன நடக்கும் என்ற அச்சத்தில் எழுந்திருக்கிறேன்' என்றார்.அவர் கட்சியினர் என்ன அட்டூழியம் செய்வர் என்பதை அவரே வாக்குமூலம் கொடுத்துள்ளார். சிவகாசி என்றாலே பட்டாசு தான். எங்கள் ஆட்சியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை அழைத்து வந்து பட்டாசு உரிமையாளர்கள் கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர்.வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வரை வழக்கு சென்றது. மூத்த வழக்கறிஞரை வைத்து வாதாடியது அ.தி.மு.க., அரசு. தி.மு.க.,வில் 38 எம்.பி.,க்கள் இருந்தும் பட்டாசு பற்றி எதுவும் பேசவில்லை. பட்டாசு பற்றி தீர்மானம் கொண்டு வந்து சட்டமசோதாவை சட்டசபையில் இயற்றி இருக்க வேண்டும்.மத்திய அரசுக்கும் அழுத்தம் கொடுக்கவில்லை. பட்டாசு தொழிலில் மக்கள் வாடி வதங்கி கொண்டிருக்கும் போது, முதல்வர் ஸ்டாலின், 'நீங்கள் நலமா?' என்று கேட்கிறார். நான் கவர்னரை எதிர்த்து பேசவில்லை என்கிறார் ஸ்டாலின். எதிர்க்கட்சிதலைவராக ஸ்டாலின் இருந்த போது, எங்கள் மீது குற்றம் சுமத்தி கவர்னரிடம் மனு கொடுத்தவர். அப்போதெல்லாம் கவர்னர் அவருக்கு நல்லவர். இவர்கள் தப்பு செய்வதை தட்டி கேட்டால் கவர்னர் மோசமானவரா? இரட்டை வேடம் போடுகிறது தி.மு.க., அரசு.நாங்களும் இப்போது துறை வாரியாக தி.மு.க., செய்த ஊழலை பட்டியலாக அளித்தோம். அதில், போதை பொருள் விற்பனை, மதுபாட்டிலுக்கு கூடுதல் விலை, அனுமதியின்றி பார் என, பட்டியலிட்டுள்ளோம். கவர்னர் நடுநிலையோடு நடவடிக்கை எடுக்க வேண்டும்.சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. இதை சரி செய்ய அ.தி.மு.க., ஆட்சி வேண்டும். தமிழகத்தில் போதை பொருள் விற்காத இடமே இல்லை. தி.மு.க.,வை சேர்ந்த ஜாபர் சாதிக்கை, போதை பொருள் கடத்துவதாக போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.மூன்றாண்டு காலமாக வெளிநாட்டுக்கு போதை பொருள் கடத்தி உள்ளார். இப்போது பிடித்தது மட்டும், 2,000 கோடி ரூபாய். மூன்றாண்டுகளில் எவ்வளவு கோடிக்கு கடத்தப்பட்டிருக்கும். இது செயலற்ற அரசாங்கம், பொம்மை முதல்வர்.ஸ்டாலின் எதை பேச வேண்டும் என, உணர்ந்து பேச வேண்டும். நாங்கள் ஒரு எல்லை வரை தான் பொறுத்திருப்போம். நாங்களும் பேச துவங்கினால், உங்கள் நிலை மோசமாகும். முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போட்டு எங்களை முடக்க முடியாது. எதையும் சந்திக்க தயார்.அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., ஜெயவர்தன், லஞ்ச ஒழிப்புத்துறையில் புதிய தலைமை செயலகம் கட்டியதில் உள்ள முறைகேடு தொடர்பாக ஸ்டாலின் மீது புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு துறை ஆதாரமில்லை என்கிறது. மீண்டும் அ.தி.மு.க., ஆட்சிக்கு வரும் போது இது விசாரிக்கப்படும். தி.மு.க.,வை சேர்ந்த அமைச்சர்கள் பலர் நீதிமன்ற வாசல்களில் ஏறி இறங்குகின்றனர். சட்டசபையில் முன்வரிசையில் அமர்ந்துள்ள பலர் விரைவில் வேறு இடத்திற்கு சென்றுவிடுவர். இவர்கள் நம்மை ஊழல் வாதி என்கின்றனர்.இவ்வாறு பேசினார்.