சென்னை:நெய்வேலி நிலக்கரி நிறுவன ஒப்பந்த தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்ட அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், வரும் 17ம் தேதி வரை போராட்டத்துக்கு தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பணி நிரந்தரம் உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து, என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டது. இதை எதிர்த்து, என்.எல்.சி., நிர்வாகம் சார்பில், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு, நீதிபதி என்.செந்தில்குமார் முன், விசாரணைக்கு வந்தது. நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'தொழிலாளர் நீதிமன்றத்தில், இந்தப் பிரச்னை நிலுவையில் உள்ளது. இரு தரப்புக்கும் இடையில் சமசர பேச்சு நிலுவையில் உள்ளது' என்றார்.தொழிற்சங்கம் தரப்பில், மூத்த வழக்கறிஞர் ஜி.சங்கரன் ஆஜராகி, ''பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கையை, 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிர்வாகம் நிறைவேற்றவில்லை. 13,000 ஊழியர்கள், தினக்கூலி அடிப்படையில் பணிபுரிகின்றனர். வேலை நிறுத்தம் என்பது அடிப்படை உரிமை; போராட்டத்தில் கலந்து கொள்ளும்படி யாரையும் கட்டாயப்படுத்தவில்லை,'' என்றார்.இந்த வழக்கில் இரு தரப்பிலும் வாதங்கள் முடியாததால், விசாரணையை, நாளைக்கு நீதிபதி செந்தில்குமார் தள்ளி வைத்தார். 'வரும் 17ம் தேதி வரை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது' எனவும் தொழிற்சங்கத்துக்கு, நீதிபதி உத்தரவிட்டார்.
சமரச பேச்சு தோல்வி
நெய்வேலி என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்களுடன், மண்டல தொழிலாளர் கமிஷனர் நேற்று நடந்த சமரச பேச்சு தோல்வியில் முடிந்துள்ளது. இதுகுறித்து, என்.எல்.சி., ஜீவா சங்க சிறப்பு செயலர் சேகர் கூறுகையில், ''பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் என்ற எங்கள் கோரிக்கையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. சில தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வை தந்துவிட்டு, நிரந்தரம் செய்யாமல் நிர்வாகம் இழுத்தடிக்கிறது. சமரச பேச்சும் தோல்வியில் முடிந்துள்ளது. அடுத்த கட்ட போராட்டம் குறித்து விரைவில் அறிவிப்போம்,'' என்றார்.