UPDATED : ஜூலை 25, 2024 05:59 AM | ADDED : ஜூலை 25, 2024 01:15 AM
விழுப்புரம்:விழுப்புரம், வழுதரெட்டியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. அனைத்து நுகர்வோர் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொதுநல சங்க மாநில தலைவர். இவர் தன் உறவினரின் நினைவு தினத்தையொட்டி, 25 பேருக்கு அன்னதானம் வழங்குவதற்காக, 2022ம் ஆண்டு விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பணம் செலுத்தி, 25 பார்சல் சாப்பாடு வாங்கினார். அதற்கான ரசீதை தர மறுத்த ஹோட்டல் உரிமையாளர் துண்டு சீட்டில் எழுதி கொடுத்தார். வீட்டிற்கு சென்ற ஆரோக்கியசாமி, உணவு பொட்டலங்களை முதியோருக்கு வழங்கியபோது, அதில் ஊறுகாய் இல்லை. ஹோட்டல் உரிமையாளரிடம் கேட்டபோது, ஊறுகாய் வைக்காதது உறுதியானது. இதையடுத்து, ஊறுகாய்க்கான 25 ரூபாயை திரும்பக் கேட்டுள்ளார் ஆரோக்கியசாமி. ஆனால், ஹோட்டல் உரிமையாளர் தர மறுத்துவிட்டார். இதுகுறித்து ஆரோக்கியசாமி, விழுப்புரம் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த குறைதீர் ஆணைய தலைவர் சதீஷ்குமார், உறுப்பினர்கள் மீரா மொய்தீன், அமலா ஆகியோர், பார்சல் உணவில் ஊறுகாய் வைக்காததால், ஆரோக்கியசாமிக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக, 30,000, வழக்கு செலவிற்கு 5,000 ரூபாய், ஊறுகாய் பாக்கெட்டுகளுக்குரிய 25 ரூபாய் எல்லாவற்றையும், 45 நாட்களில் வழங்க ஹோட்டல் உரிமையாளருக்கு உத்தரவிட்டனர்.