உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆவண பதிவை ரத்து செய்ய பதிவாளருக்கு அதிகாரம் வழங்கிய சட்டப்பிரிவு செல்லாது

ஆவண பதிவை ரத்து செய்ய பதிவாளருக்கு அதிகாரம் வழங்கிய சட்டப்பிரிவு செல்லாது

சென்னை : 'மோசடி செய்து மேற்கொள்ளப்படும் சொத்து ஆவணங்கள் பதிவை ரத்து செய்ய, மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் வழங்கும் வகையில், தமிழக அரசு கொண்டு வந்த புதிய சட்டப்பிரிவு செல்லாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2022 ஆகஸ்டில், பதிவு சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் செய்தது. இதன்படி, 77 ஏ என்ற அந்த சட்டப்பிரிவின்படி, சொத்துக்களின் உரிமையாளர்களுக்கு தெரியாமல், ஆள்மாறாட்டம் மற்றும் மோசடி செய்து மேற்கொள்ளப்படும் சொத்து ஆவணங்கள் பதிவை ரத்து செய்ய, மாவட்ட பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. இதையடுத்து, ஆயிரக்கணக்கில் பத்திரப்பதிவுகள் ரத்து செய்யப்பட்டன.இந்நிலையில், அரசின் சட்டத்திருத்தத்தை எதிர்த்தும், பத்திரப்பதிவுகள் ரத்தை எதிர்த்தும், மாவட்ட பதிவாளருக்கு வழங்கப்பட்ட அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பியும் உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:ஆவணங்கள் பதிவை ரத்து செய்ய, எந்த கட்டுப்பாடும், வழிமுறைகளும் இல்லாமல், மாவட்ட பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது ஊழலுக்கும், நில அபகரிப்பாளர்களின் பிளாக் மெயிலுக்கும் வழிவகுக்கும். நேர்மையாக சொத்துக்களை வாங்குபவர்களின் உரிமையில் பாதிப்பு ஏற்படும். சட்டப்பிரிவு 77 ஏ, மாவட்ட பதிவாளர்களுக்கு தடையற்ற அதிகாரங்களை வழங்குகிறது. தமிழக அரசின் புதிய சட்டப்பிரிவு, சிவில் நீதிமன்றத்தின் இடத்தில் புதிய அமைப்பை உருவாக்குவதாக உள்ளது. இதை, அனுமதிக்க முடியாது. சட்டப்பிரிவு 77 ஏ - ன்படி, மாவட்ட பதிவாளர்கள் பிறப்பித்த சில உத்தரவுகளை பரிசீலிக்கும் போது, அவர்களுக்கு நீதித்துறை அதிகாரத்தை வழங்குவது அறிவுடமை அல்ல. அதனால், பிரிவு 77 ஏ, அடிப்படை கொள்கைக்கு முரணாக இருப்பதால், அதை ரத்து செய்ய எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை.பதிவுச் சட்டத்தின் நோக்கம், வரம்பை மீறும் வகையில், சட்டப்பிரிவு 77 ஏ இருப்பதால், அந்தப் பிரிவு சட்டவிரோதமானது. இந்தச் சட்டப்பிரிவின் அடிப்படையில், மாவட்டப் பதிவாளர்கள் பிறப்பித்த உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

சூரியா
ஆக 03, 2024 06:37

அப்படியென்றால், பதிவிற்கு இனி வரும் ஆவணங்களுடன் தேவையற்ற பல இணைப்பு ஆவணங்களைத் தாக்கல் செய்யச் சொல்வதை சார்பதிவகம் தவிற்கலாம்.


மேலும் செய்திகள்





புதிய வீடியோ