உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., உடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை திருப்திகரம்: காங்கிரஸ் விளக்கம்

தி.மு.க., உடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை திருப்திகரம்: காங்கிரஸ் விளக்கம்

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக - காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்னர், பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.லோக்சபா தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கபடும் என அரசியல் கட்சிகள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது. 3வது முறையாக ஆட்சியை பிடிக்க பா.ஜ., திட்டம் வகுத்துள்ளது. ஆனால் பா.ஜ.,விற்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கிய இண்டியா என்ற கூட்டணி கலகலத்துள்ளது.தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, சிபிஎம், சிபிஐ, மதிமுக, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக - காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. டி.ஆர்.பாலு தலைமையிலான 5 பேர் கொண்ட குழு காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். காங்கிரஸ் தரப்பில், கே.எஸ். அழகிரி, செல்வப்பெருந்தகை, மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொகுதி பங்கீடு பேச்சு: காங்கிரஸ் விளக்கம்

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பிறகு, தமிழக காங்கிரஸ் தலைவர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: லோக்சபா தேர்தல் குறித்த தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது. பேச்சுவார்த்தைக்கு முன்பு, நாங்கள் எந்த பட்டியலையும் வெளியிடவில்லை. தேர்தலில் வெற்றி பெற, எவ்வாறு பிரசாரம் செய்வது குறித்து நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம். தொகுதி பங்கீடு குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கும். பா.ஜ., அ.தி.மு.க.,வை எவ்வாறு எதிர்கொள்வது பற்றி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இவ்வாறு அவர் கூறினார்.

இணக்கமான உறவு

காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் அளித்த பேட்டி: தி.மு.க.,- காங்கிரஸ் இடையே நீண்டகால இணக்கமான உறவு நீடிக்கிறது. பிரிவினை சக்திகளுக்கு எதிராக ஒன்றாக இணைந்து போராடுவோம். தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

லீக் ஆகாது!

காங்., விருப்ப தொகுதிகள் குறித்த விவரம் கட்சி அலுவலகத்தில் இருந்து 'லீக்' ஆனதா? என்ற கேள்விக்கு, 'எங்கள் அலுவலகத்தில் இருந்து லீக் ஆகாது. அது காமராஜர் கட்டிய கட்டிடம். நீங்க எவ்வளவு வேண்டுமானாலும் தண்ணி ஊத்துங்க' என கே.எஸ். அழகிரி பதில் அளித்தார்.

21 தொகுதிகள்

முன்னதாக, திருநெல்வேலி, ராமநாதபுரம், தென்காசி, திண்டுக்கல், திருவண்ணாமலை, தஞ்சை, மயிலாடுதுறை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், தென் சென்னை, அரக்கோணம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி , தேனி ஆகிய 21 தொகுதிகளிலும் போட்டியிட காங்கிரஸ் விருப்பம் தெரிவித்துள்ளது என பட்டியல் ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியானது.

காங்., கட்சி மறுப்பு

லோக்சபா தேர்தலில் காங்., கட்சி போட்டியிடும் இடங்கள் குறித்து ஆதாரமற்ற பட்டியல் ஊடகங்களில் வெளியாகியுள்ளது; இது முற்றிலும் தவறான செய்தி என மறுப்பு தெரிவித்து தமிழக காங்., கமிட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ