இலங்கைக்கு கடத்த இருந்த 250 கிலோ கஞ்சா பறிமுதல்
ராமநாதபுரம்:இலங்கைக்கு கடத்த இருந்த 250 கிலோ கஞ்சாவை, ராமநாதபுரம் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.தெலுங்கானா மாநிலத்தில் இருந்து, ராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில், ராம்நகர் பகுதியில் வாகனங்களை போலீசார் சோதனையிட்டனர். அப்போது, அங்கு வந்த கார் ஒன்றை சோதனையிட முற்பட்டபோது, காரில் இருந்தவர்கள் தப்பினர். காரில், 250 கிலோ கஞ்சா இருந்தது. காரையும், கஞ்சாவையும் பறிமுதல் செய்த போலீசார் கடத்தல்காரர்கள் குறித்து விசாரிக்கின்றனர். கடத்தல் கஞ்சாவின் மதிப்பு, 20 லட்சம் ரூபாய் என, போலீசார் தெரிவித்தனர்.