சென்னை : தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை:கடந்த, 1974ல் தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியில் இருந்த போது, மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரசால், கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது.பின், பல முறை மத்திய அரசின் பசையான அமைச்சர் பதவிகளை மட்டும் வாங்கி கொண்டு, கச்சத்தீவு விவகாரத்தில் கள்ள மவுனம் மட்டும் சாதித்து கொண்டிருக்கும் தி.மு.க.,வுக்கு, தேர்தல் காலங்களில் மட்டுமே அதன் ஞாபகம் வருவது விந்தை. கச்சத்தீவு விஷயத்தில், தி.மு.க.,வின் மறைந்த தலைவர் கருணாநிதி செய்தது துரோகம்.இலங்கை போரின் போது, தமிழகத்தில் ஆளுங்கட்சியாகவும், மத்திய காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியாகவும் இருந்த தி.மு.க., நடத்திய, மூன்று மணி நேர உண்ணாவிரத கபட நாடகங்களை மக்கள் மறந்து விட்டனர் என்று, ஸ்டாலின் நினைத்து கொண்டிருக்கிறார்.அதன்பின்னர் தான், நம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், கைது செய்வதும் மிகவும் அதிகரித்தது.தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது, இலங்கை கடற்படையினரால், 80க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போது, ஊழல் செய்வதில் மும்முரமாக இருந்த தி.மு.க., தமிழக மீனவர்கள் உயிரை காப்பாற்ற எடுத்த நடவடிக்கை வெறும்மவுனமே. கடந்த, 2014ல் இலங்கை அரசால், தமிழக மீனவர்களுக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்ட போது, தி.மு.க., அன்றும் மவுனமாக தான் இருந்தது.அவர்களை பத்திரமாக மீட்டது பிரதமர் நரேந்திர மோடி அரசு. பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின், இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர்கள், உடனுக்குடன் மீட்கப்படுகின்றனர்.அவர்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் நேராமல்,சட்டபாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த பாரத நாடும், நம் மீனவ சகோதரர்களுக்கு உறுதுணையாக நிற்கிறது.கச்சத்தீவை விட்டுக் கொடுத்து, தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தை பாதிப்பிற்கு உள்ளாக்கி விட்டு, 50 ஆண்டுகள் மவுனமாக இருந்து விட்டு, தேர்தல் நேரத்தில் மட்டும் கச்சத்தீவு குறித்து பேசும் ஸ்டாலின், சுய பரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது.முதல்வருக்கு ஞாபக மறதியா இல்ல, குற்ற உணர்ச்சியா?இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.