| ADDED : மார் 18, 2024 01:38 AM
ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி டி.பொம்மிநாயக்கன்பட்டி விலக்கு அருகே கார், சரக்கு வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில், காரில் பயணித்த தனியார் பள்ளிகளின் பெரியகுளம் மாவட்ட கல்வி அலுவலர் சங்குமுத்தையா, அவரது டிரைவர் குமரேசன் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மல்லப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கு முத்தையா 60. விடுமுறை நாளான நேற்று சொந்த ஊருக்கு சென்றுவிட்டு, தனது காரில் தேனி திரும்பினார். டிரைவர் குமரேசன் காரை ஓட்டினார். மதியம் 3:30 மணிக்கு ஆண்டிபட்டி டி.பொம்மிநாயக்கன்பட்டி விலக்கு அருகே சென்றபோது தேனியில் இருந்து மதுரை சென்ற சரக்கு வேன், காருடன் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் காரின் பின்புறம் அமர்ந்திருந்த சங்குமுத்தையா, டிரைவர் இருவரும் காரிலேயே பரிதாபமாக பலியாகினர். ஆண்டிபட்டி போலீசார் காரில் இருந்த இரு உடல்களையும் மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேன் டிரைவர் மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் 33, காயத்துடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.