அறிவுசார் குறைபாடுள்ள மாணவியை வன்புணர்வு செய்தோருக்கு கடும் தண்டனை டி.ஜி.பி.,க்கு கூட்டமைப்பு மனு
சென்னை,:'சென்னையில் அறிவுசார் குறைபாடு உடைய மாணவியை வன்புணர்வு செய்த அனைவரையும் கண்டுபிடித்து, அதிகபட்ச தண்டனை பெற்று தர வேண்டும். 'சிறப்பு குழந்தைகளுக்கு எதிராக கருத்து வெளியிடும், 'நீர்த்திரை' எனும் யு டியூப் சேனலை விசாரணைக்கு உட்படுத்தி, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, டி.ஜி.பி., மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் ஆகியோரிடம், அறிவுசார் குறைபாடு உடையவர்களுக்கான சங்கங்களின் கூட்டமைப்பு மனு அளித்துள்ளது. அதிகபட்ச தண்டனை
இதுகுறித்து, கூட்டமைப்பு தலைவர் கேத்தரீன் இன்பராஜ் மற்றும் நிர்வாகிகள் வழங்கியுள்ள புகார் மனு: ஒரு அறிவுசார் குறைபாடு உடைய தமிழக மாணவிக்கு, சென்னையில் கடந்த இரு மாதங்களாக, நடந்த கொடுமை கண்டு, எமது கூட்டமைப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. சென்னை அயனாவரம் பகுதியில் தாயை இழந்து, தந்தை பாதுகாப்பில் வளர்ந்து, சென்னையில் உள்ள கல்லுாரி ஒன்றில் பட்டப் படிப்பு பயின்று வரும் மாணவியை, ஏழு பேர் கொண்ட கும்பல், தொடர்ந்து வன்புணர்வு செய்து வந்துள்ளது. இந்த படுபாதகச் செயலை செய்த அனைவரையும் கண்டுபிடித்து, சட்டத்தின் முன் நிறுத்தி, அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும். இந்த சம்பவத்தில், பாரதீய சட்டத்தின் பத்து பிரிவுகளின் கீழ் காவல் துறை வழக்கு பதிவு செய்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. இந்த கொடிய செயல், ஒரு தனிநபர் மீது தொடுக்கப்பட்ட கிரிமினல் தாக்குதல் என்பதையும் தாண்டி, அரசின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகவே கூட்டமைப்பு கருதுகிறது.காவல் துறை விரைந்து வேகம் காட்டி, எந்த குற்றவாளியும் தப்பி விடாமல், சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தண்டனை பெற்றுத்தர வேண்டும். பாதிக்கப்பட்ட சிறப்பு குழந்தைக்கு தேவையான உளவியல் ஆதரவு தர கூட்டமைப்பு தயாராக உள்ளது. எதிரான கருத்து
இரண்டாவதாக, மிகவும் இகழத்தக்க ஒரு வீடியோ பதிவு, 'நீர்த்திரை' எனும் யு டியூப் சேனல் வாயிலாக வெளியிடப்பட்டு, தற்போது வரை, 15,465 பேரால் காணப்பட்டுள்ளது. கடந்த நவ., 26ல், 'ஆட்டிசம் குழந்தைகள் அதிகம் இருப்பதே அஹ்ரகாரத்தில்' என்று இதற்கு தலைப்பிடப்பட்டுள்ளது. இது, கோவை கு.ராமகிருஷ்ணன் என்பவரால் நிகழ்த்தப்பட்டுள்ள ஒலி, ஒளி பதிவு.இந்த வீடியோ, தமிழ்ச் சமூகத்தின் நலனுக்கும், ஒருமைப்பாட்டிற்கும், சட்டம் - ஒழுங்கிற்கும் விரோதமானது. இது, வெறுப்பு உமிழும் பேச்சு. ராமகிருஷ்ணன், அறிவியலுக்குப் புறம்பாக, தமிழக மக்களை திருப்பி விடும் பணியை செய்திருக்கிறார் என்று, கூட்டமைப்பு கருதுகிறது.'மரக்கறி மட்டுமே உண்டு சோம்பித்திரியும் ஒரு ஜாதியில் தான் இக்குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகம் உள்ளது' என்று கூறும் பேச்சாளர், இதற்காக இச்சமூகத்தை தடை செய்ய வேண்டும் என்பதுடன், புலால் உணவு உண்டு, உழைப்பவர்களுக்கு ஆட்டிச குழந்தைகள் பிறக்காது என்று, உண்மைக்கும், அறிவியல் கருத்துக்கும் புறம்பான, தவறான நம்பிக்கையூட்டுவது கவலை கொள்ளச் செய்கிறது.நீர்த்திரை சேனல், இந்த வீடியோவை உடனே பொதுத்தளத்தில், பொது மன்னிப்பு கோரி நீக்க வேண்டும். இந்த சேனல், தொடர்ந்து அனைத்து சிறப்பு குழந்தைகளுக்கும் எதிரான கருத்து வெளியிடுவதாகவும், சிறப்பு பெற்றோர் கருதுகின்றனர். எனவே, பேச்சாளர் மற்றும் சேனல் இருவரையும் விசாரணைக்கு உட்படுத்தி, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.