மேலும் செய்திகள்
கோவில் கலைஞர்களுக்கு அறநிலையத்துறை பாராட்டு
29-Jan-2025
சென்னை:சிறந்த கைவினை கலைஞர்களுக்கு, 'வாழும் கைவினை பொக்கிஷம்' விருது வழங்கி, முதல்வர் ஸ்டாலின் கவுரவித்தார்.கைவினை தொழிலுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த, 65 வயதுக்கு மேற்பட்ட சிறந்த கைவினைக் கலைஞர்களுக்கு, தமிழக அரசு சார்பில், 'வாழும் கைவினை பொக்கிஷம்' என்ற பெயரில் விருது வழங்கப்படுகிறது. தமிழக கைத்திறன் தொழில்கள் வளர்ச்சி கழகத்தால், இந்த விருது வழங்குவதற்கு ஆண்டுதோறும், 15 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பிரிவிற்கு ஒருவர் வீதம் எட்டு கிராம் தங்கப்பதக்கம், தாமிரப்பத்திரம், சான்றிதழுடன், ஒரு லட்சம் ரூபாய் காசோலையும் வழங்கப்படுகிறது.அதன்படி, 2023 - 24ம் ஆண்டுக்கான வாழும் கைவினை பொக்கிஷம் விருதுகளை, தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார். தஞ்சாவூர் கலைத்தட்டு கலைஞர் முருகேசன், ஈரோடு பஞ்சலோக சிற்பக் கலைஞர் ராதா, விழுப்புரம் சுடு களிமண் சிற்பக் கலைஞர் பலராமன், கன்னியாகுமரி மரச்சிற்பக் கலைஞர் நாகமுத்து, மதுரை தகட்டு வேலை கலைஞர் கிருஷ்ணமூர்த்தி, திருவள்ளூர் பனை ஓலை பொருட்கள் செய்யும் ஹம்சா பீவி, மதுரை பஞ்சலோக சிலைகள் செய்யும் கலைஞர் கிருஷ்ணன், கன்னியாகுமரி மூங்கில் பாய் ஓவியம் வரையும் லில்லி மேரி ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.இதேபோல, சிறந்த கைவினைக் கலைஞர்களின் கைத்திறன் தொழிலின் பங்களிப்பு, அபிவிருத்தி மற்றும் படைப்புகளை கருத்தில் கொண்டு, பூம்புகார் மாநில விருதும் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக, 10 கைவினை கலைஞர்களுக்கு ஆண்டுதோறும், 12 லட்சம் ரூபாய் மதிப்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. விருதுடன், 50,000 ரூபாய் பரிசுத்தொகை, 4 கிராம் தங்கப்பதக்கம், தாமிர பத்திரம், தகுதிச் சான்றிதழும் வழங்கப்படுகிறது. சென்னை உலோக சிற்பகக் கலைஞர் ராமகிருஷ்ணன், காகிதக் கூழ் பொம்மைகள் தயாரிக்கும் குணசுந்தரி, தஞ்சாவூர் ஓவியக் கலைஞர் காத்தான், சுடு களிமண் சிற்பக் கலைஞர் மெய்யர், செங்கல்பட்டு மரச்சிற்பக் கலைஞர் ரமேஷ், தேங்காய் ஓடு பொருட்கள் தயாரிக்கும் ஸ்ரீதர் ஆகியோருக்கு, முதல்வர் ஸ்டாலின் விருதுகளை வழங்கினார்.திருவண்ணாமலை பனை பொருட்கள் தயாரிக்கும் கார்த்திகேயன், கடலுார் காகிதக் கூழ் பொம்மைகள் தயாரிக்கும் கல்யாணகுமார், கண்ணாடி கலைப்பொருட்கள் செய்யும் தஞ்சாவூர் சந்திரசேகரன் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. குறு, சிறு தொழில் துறை அமைச்சர் அன்பரசன், தலைமை செயலர் முருகானந்தம், கைத்தறி துறை செயலர் அமுதவல்லி, தமிழக கைத்திற தொழில்கள் வளர்ச்சி கழக மேலாண் இயக்குநர் அமிர்தஜோதி ஆகியோர் பங்கேற்றனர்.
29-Jan-2025