மருத்துவ உபகரணங்களின் தரத்தை அறிய மருத்துவ கல்லுாரிகளில் சிறப்பு குழுக்கள்
சென்னை: மருத்துவ உபகரணங்களின் எதிர்விளைவுகள் மற்றும் தரத்தை ஆராய்வதற்காக, ஒவ்வொரு மருத்துவ கல்லுாரியிலும் சிறப்புக் குழு அமைக்க, தேசிய மருத்துவ ஆணையமான என்.எம்.சி., அறிவுறுத்தி உள்ளது. கட்டுப்பாடுகள்
மத்திய சுகாதாரத்துறை தகவல்களின்படி, மருத்துவ உபகரணங்களில், 80 சதவீதம் ஒழுங்குமுறைப் படுத்தப்படாமல் இருந்ததை அடுத்து, அவற்றையும் மருந்து கட்டுப்பாட்டு வரையறைக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.அதன்படி, மருத்துவ உபகரணங்களை விற்பனை செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.பொதுவாக உடலுக்கு உள்ளே பொருத்தப்படும், 'ஸ்டென்ட், பேஸ்மேக்கர், செயற்கை மூட்டுகள்' உள்ளிட்டவை, 'இன் வைவோ' உபகரணங்கள் எனவும், வெளியே இருந்து பரிசோதிக்கப் பயன்படுத்தப்படும் ரத்த அழுத்தமானி, 'ஸ்கேன், எக்ஸ்ரே, தெர்மோமீட்டர்' போன்றவை, 'இன் வைட்ரோ' உபகரணங்கள் எனவும் வகைப்படுத்தப்படுகின்றன.'இன் வைவோ' உபகரணங்களின் தரத்தை உறுதிபடுத்தும் நோக்கில், அதனால் ஏற்படும் எதிர்விளைவுகள், பாதுகாப்பு குறைபாடுகளை உடனுக்குடன் அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற விதி, ஏற்கனவே உள்ளது. அவ்விதி, 'இன் வைட்ரோ' உபகரணங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது.இந்நிலையில், அனைத்து வகையான மருத்துவ உபகரணங்களின் தரம், செயல்பாடு மற்றும் எதிர்விளைவுகள் குறித்து மதிப்பீடு செய்வதற்காக, மருத்துவக் கல்லுாரிகள் தோறும் சிறப்புக் குழுக்களை அமைக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது. மதிப்பீட்டு குழு
இதுகுறித்து, என்.எம்.சி., செயலர் டாக்டர் ராகவ் லங்கர் சார்பில், அனைத்து மருத்துவக் கல்லுாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:மருத்துவ உபகரணங்களின் தரத்தை உறுதி செய்யும் நோக்கில், அவற்றை கண்காணிக்கும் திட்டத்தை, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், 2015ல் நடைமுறைப்படுத்தியது. அதன் ஒரு பகுதியாக, நாட்டில் உள்ள மருத்துவ கல்லுாரிகள் அனைத்தும், தனித்தனியாக மருத்துவ உபகரணங்கள் எதிர்விளைவு மதிப்பீட்டு குழு அமைக்க வேண்டும்.மருத்துவ கல்லுாரி மருத்துவமனை கண்காணிப்பாளர், அதற்கு ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார்.அந்த குழுவை, இந்திய பார்மாகோபியா எனப்படும், மருந்து கோட்பாடு ஆணையத்தில் பதிவு செய்வது அவசியம். அந்த குழுவினரின் விபரங்களை, ஒவ்வொரு கல்லுாரியும் தங்களது இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். இந்நடைமுறைகளை, வரும் 31ம் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.