டங்ஸ்டன் திட்டம் ரத்துக்கு அ.தி.மு.க.,தான் காரணம்
மதுரை:''சட்டசபையில் பழனிசாமி கேள்வி கேட்ட பின்பு தான், டங்ஸ்டன் பிரச்னைக்கு முடிவு கிடைத்தது. இதற்கு முழுமையான காரணம் அ.தி.மு.க.,தான்'' என முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ கூறினார். மதுரையில் அவர் அளித்த பேட்டி: தமிழகத்துக்கு இப்படி ஒரு முதல்வர்(ஸ்டாலின்) கிடைத்ததற்கு நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். பொய்யாக பேசுகிறார். சட்டம் - ஒழுங்கு மோசமாக உள்ளது என தி.மு.க., அரசை நீதிமன்றமே கண்டித்துள்ளது. அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில், 'யார் அந்த சார்?' என்பது போய் 'யார் அந்த கார்?' என பேசப்பட்டு வருகிறது. போலீசாரிடம் தி.மு.க.,வினர் பேசி, 'காரில் வந்தவர்கள் தி.மு.க.,வினர் இல்லை என சொல்லுங்கள்' எனக்கூறி இருக்கிறார்கள். 'நடப்பதை பூதாகரமாக மாற்றி பேசுகிறார்கள்' என்று முதல்வர் பேசுகிறார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு ஜோராக இருப்பது போல் முதல்வர் பேசுகிறார். சமூக வலைத்தளங்களில் குரல் கொடுப்பவர்கள், தற்போது ஆளையே காணோம். மக்களே தற்போது சமூக வலைத்தளத்தில் எடுத்துச் சொல்கிறார்கள். தி.மு.க., அரசை வெறுக்கிறார்கள். டங்ஸ்டன் கனிம சுரங்கம் வரும் வரை 9 மாதம் தி.மு.க., அரசு துாங்கியது. சட்டசபையில் பழனிசாமி குரல் எழுப்பினார். ஆனால் 'வெற்றி வெற்றி' என்று காமெடி நடிகர் வடிவேல் சொல்வது போல, மேலுார் அரிட்டாபட்டிக்கு வந்து ஸ்டாலின் பேசியிருக்கிறார். மத்திய அமைச்சரை அழைத்து வந்து, அண்ணாமலை நாடகம் நடத்துகிறார். டங்ஸ்டன் திட்டம் வந்ததற்கு மத்திய, மாநில அரசுகள் தான் முழு காரணம். மக்களை இந்த அளவிற்கு போராட வைத்தது தேவையா? பழனிசாமி சட்டசபையில் கேள்வி கேட்ட பின்பு தான் இப்பிரச்னைக்கு முடிவு கிடைத்தது. இதற்கு முழுமையான காரணம் அ.தி.மு.க.,தான். தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருந்தது. ஜாதி, மத வேறுபாடின்றி அண்ணன் தம்பியாக பழகி வருகிறோம். தி.மு.க., ஆட்சிக்கு வந்தது முதல் மதப்பிரச்னை, ஜாதி மோதல் நடக்கிறது. வேங்கைவயல் பிரச்னையை திருமாவளவன் ஏற்கவில்லை. தி.மு.க., கூட்டணியில் பெரும் பிரச்னை நிலவுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.