முதிர்ச்சி இல்லாமல் பேசுகிறார் உதயநிதி அ.தி.மு.க., விழாவில் பழனிசாமி ஆவேசம்
சென்னை:அ.தி.மு.க.,வின், 53வது ஆண்டு விழாவை ஒட்டி, நேற்று அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி மரியாதை செலுத்தினார்; தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். பின், பழனிசாமி அளித்த பேட்டி:சென்னையில் குறைந்த மழை பெய்தும், பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியிருந்ததால், மக்கள் பாதிக்கப்பட்டனர். ஆனால், மக்கள் பாதிக்கப்படவில்லை என, முதல்வர் கூறுகிறார். அ.தி.மு.க., ஆட்சியில், 'தானே, ஒக்கி, வர்தா, கஜா' என, பல புயல்கள் வீசின. ஆனால், புயல் வேகத்தில், தமிழக அரசு சார்பில் மக்களுக்கு பணியாற்றினோம். அதன் விளைவாக, மக்கள் எதிர்கொண்ட பிரச்னையை தீர்த்து வைத்தோம். அ.தி.மு.க., ஆட்சியில் துவங்கப்பட்ட மழை நீர் வடிகால் பணிகளை, இந்த ஆட்சியில் முழுமையாக நிறைவேற்றவில்லை. அதனாலேயே சென்னையில் வெள்ளம் ஏற்படுகிறது. பாதியில் நிற்கிற மழைநீர் வடிகால் பணிகளை, தி.மு.க., அரசு முழுமையாக செய்திருந்தால், சென்னையில் தற்போதைய சாதாரண மழைக்கும், நீர் தேங்கியிருக்காது.முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி திருப்புகழ் தலைமையிலான கமிட்டி அறிக்கையின்படி, செய்யப்பட்ட வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் என்ன? அதுபற்றிய முழுமையான தகவல்களுடன் வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என கோரினேன். ஆனால், அதற்கு பதிலளித்த துணை முதல்வர் உதயநிதி, 'மழை நீர் எங்கேயும் நிற்காமல் இருக்கிறது. அதுதான் வெள்ளை அறிக்கை' என, முதிர்ச்சி இல்லாமல், சொல்லி இருக்கிறார். பல அமைச்சர்கள் கவனிக்க வேண்டிய துறைகளை, உதயநிதி மட்டுமே கவனிக்கிறார். அனுபவம் வாய்ந்த அமைச்சர்களுக்கு பதிலாக, உதயநிதி ஒருவரே வேலை செய்கிறார். அனுபவம் பெற்ற மூத்த அமைச்சர்களின் அறிவுரைகளை கேட்காமல், உதயநிதியை தி.மு.க., முன்னிலைப்படுத்துகிறது. அதற்கு அப்படி என்ன அவசியம் என புரியவில்லை. அ.தி.மு.க.,வில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள், எவ்வளவோ அவதாரம் எடுக்கின்றனர். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என, என்னிடம் ஆறு முன்னாள் அமைச்சர்கள் கூறியதாக சொல்வது தவறு. கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் நீக்கப்பட்டு, வெளியேற்றப்பட்டு விட்டனர். எனவே, அ.தி.மு.க., இரண்டாக கிடக்கிறது; பிளவுபட்டுள்ளது என, இனி யாரும் பேச வேண்டாம். அ.தி.மு.க.,வில் உட்பகை இல்லை. கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களே உட்பகை கொண்டவர்கள். இவ்வாறு அவர் கூறினார்.
நால்வர் புறக்கணிப்பு?
சசிகலா, பன்னீர்செல்வம், தினகரனை, கட்சியில் சேர்க்குமாறு, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் ஆகிய 6 பேரும் பழனிசாமியிடம் வலியுறுத்தியதாக, ஏற்கனவே தகவல் வெளியானது. இதுகுறித்த கேள்விக்கு, நேற்று பழனிசாமி கூறுகையில், ''நீக்கப்பட்டவர்களை இணைப்பது குறித்து, அந்த 6 பேரும் பேசவில்லை. அவர்களில் வேலுமணியும், நத்தம் விஸ்நாதனும் இங்கு வந்துள்ளனர். அவர்களிடம் வேண்டுமானால் கேட்டுப் பாருங்கள்,'' என்றார். அதில் வேலுமணி, அது தொடர்பான கேள்விக்கு எந்த பதிலும் சொல்லவில்லை; மற்ற 4 பேரும், நேற்று நடந்த அ.தி.மு.க.,வின் 53வது ஆண்டு விழாவுக்காகக் கூட சென்னை வரவில்லை.
அ.தி.மு.க., சரியாகஇல்லை: சசிகலா
அ.தி.மு.க., ஆண்டு விழாவை, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் தனித்தனியாக கொண்டாடினர்.சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு, அ.தி.மு.க., தொண்டர்களின் உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் பங்கேற்றனர். சென்னை போயஸ் கார்டனில் உள்ள தன் வீட்டில், எம்.ஜி.ஆர்., படத்திற்கு சசிகலாவும், அவரது ஆதரவாளர்களும் மலர் துாவி மரியாதை செலுத்தினர். பின், சசிகலா அளித்த பேட்டி: அ.தி.மு.க.,வை வலுப்படுத்த நிறைய வியூகம் வகுக்க வேண்டியதிருக்கிறது. அ.தி.மு.க., சரியாக இல்லை என்பது எனக்கு தெரிகிறது; அதை சரிப்படுத்துவேன். வரும் 2026 சட்டசபை தேர்தலில், நிச்சயமாக எம்.ஜி.ஆரின் மக்களாட்சி மலரும்; அதை பொறுத்திருந்து பாருங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.