| ADDED : மார் 02, 2024 12:54 AM
சென்னை:தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடி,எம்.எல்.ஏ., பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், அவர் வெற்றி பெற்ற திருக்கோவிலுார் தொகுதியை காலி என அறிவிக்கும்படி, சபாநாயகருக்கு அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தை, முன்னாள் அமைச்சர்கள் தளவாய்சுந்தரம், விஜயபாஸ்கர் ஆகியோர், நேற்று சட்டசபை செயலர் சீனிவாசனிடம் வழங்கினர். பின், தளவாய்சுந்தரம் அளித்த பேட்டி:பொன்முடிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கடந்த ஆண்டு டிச., 21ல், சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து, அவர் வகித்து வந்த எம்.எல்.ஏ., பதவி பறிபோய் விட்டது. ஆனால், அவர் தொகுதி காலியானதாக இன்னும் அறிவிக்கவில்லை. அதை அறிவிக்க வேண்டியது சபாநாயகர் கடமை.இவ்வாறு அவர் கூறினார்.