மதநல்லிணக்க வழிபாட்டிற்கு அனுமதி கிடைக்குமா? காங்கிரஸ் ஏற்பாடு என்பதால் போலீசார் குழப்பம்! காங்கிரஸ் ஏற்பாடு என்பதால் போலீசார் குழப்பம்
மதுரை:மதுரை திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ் சார்பில் இன்று நடக்க உள்ள மதநல்லிணக்க வழிபாட்டிற்கு போலீசார் அனுமதி வழங்குவது குறித்து அரசின் ஆலோசனையை கேட்டுள்ளனர். திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் வழிபாடு தொடர்பாக சர்ச்சை நீடித்து வரும் நிலையில், அதுதொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நிலுவையில் உள்ளன. மலையை பாதுகாக்கக்கோரி நேற்று முன்தினம் நடந்த அறப்போராட்டத்தில் பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்பினர் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இதுவரை இவ்விவகாரத்தில் பா.ஜ., தவிர, அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் மத பிரச்னையில் தலையிட்டால் ஓட்டுகள் பாதிக்கும் என்பதால் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தை அரசியலாக்கி, அதன் மூலம் தனது இருப்பைக் காட்டிக்கொள்ளவும், தன்னைப்போல் மற்ற தி.மு.க., கூட்டணி கட்சி தலைவர்களும் தி.மு.க.,வுக்கு ஆதரவாக இவ்விஷயத்தை 'கை'யில் எடுக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை களத்தில் இறங்கியுள்ளார். இதன் ஒரு பகுதியாகத்தான் திருப்பரங்குன்றத்தில் இன்று அனைத்து கட்சியினரும் பங்கேற்கும் மதநல்லிணக்க வழிபாடு நடத்தப்படும் என அறிவித்துள்ளார். ஏற்கனவே திருப்பரங்குன்றத்தில் உள்ளூர் மக்கள் மதநல்லிணக்கத்துடன் தான் வாழ்ந்து வருகின்றனர். 'வெளியூரைச் சேர்ந்தவர்கள்தான் மதப்பிரச்னையாக்கி விட்டார்கள்' என அவர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், 'மதநல்லிணக்க வழிபாடு' என்ற பெயரில் வெளியூரைச் சேர்ந்த காங்கிரசார் 'அரசியல்' செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.திருப்பரங்குன்றத்தில் குழுவாகவோ, இயக்கமாகவோ வந்து வழிபட தடை நீடிக்கும் நிலையில் செல்வப்பெருந்தகை தலைமையில் அனைத்துக் கட்சியினர் பங்கேற்பதை தடை செய்வதா அல்லது அனுமதிப்பதா என போலீசார் குழப்பத்தில் உள்ளனர். அரசிடம் அறிவுரை கேட்டுள்ளனர். அனுமதி தரும் பட்சத்தில் இதையே காரணம்காட்டி நாளை வேறு ஒரு கட்சியும் அனுமதி கேட்கும் என்பதால் திருப்பரங்குன்றத்தை தவிர்த்து நகரின் பிற பகுதிகளில் ஆர்ப்பாட்டமாக நடத்த அனுமதி கேட்டால் அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கலாம் எனவும் அரசுக்கு பரிந்துரைத்துள்ளனர்.