| ADDED : நவ 28, 2025 06:48 PM
புதுடில்லி: ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை வீட்டில் இருந்தபடியே மொபைல் செயலி மூலம் மாற்றிக்கொள்ளும் வசதி வர உள்ளதாக ஆதார் ஆணையம் அறிவித்துள்ளது.இந்தியாவில் முக்கிய ஆவணமாக ஆதார் மாறியுள்ளது. அரசின் திட்டங்கள் முதல் பான் கார்டு வரை ஆதார் இணைக்கப்பட்டுள்ளது. வங்கியில் கணக்கு துவக்கவும், நலத்திட்டங்களின் பலன்களை பெறவும் அவசியமானதாக உள்ளது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஆதாரில் பெயர், முகவரி, மொபைல் எண் என ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால், தபால் அலுவலகம், வங்கிகள், ஆதார் மையங்களுக்கு உரிய ஆவணங்களுடன் மக்கள் செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது. அங்கு கூட்டம் அதிகமாக இருப்பதால் மக்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.தற்போது, வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த சிக்கலை தீர்க்க ஆதார் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. முதற்கட்டமாக ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை, மொபைல்போன் செயலி வாயிலாக மாற்றிக் கொள்ளும் வசதியை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அந்த ஆணையம் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: விரைவில் வருகிறது. ஆதாரில் மொபைல் எண்ணை, வீட்டில் இருந்தபடியே ஓடிபி மற்றும் முக அங்கீகாரம் மூலம் மாற்றிக் கொள்ளலாம்.ஆதார் மையங்களில் இனியும் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அந்த பதவில் கூறப்பட்டுள்ளது.கட்டாயம் ஏன்
* அரசின் நலத்திட்டங்கள் மற்றும் பலன்களை பெறவும்* வங்கிகளில் கேஓய்சி* வருமான வரி சரிபார்ப்பு* டிஜிலாக்கர் மற்றும் டிஜிட்டல் சேவைகள்* ஓடிபி மூலம் அங்கீகாரம் செய்வதற்கும் ஆதார் எண்ணில் மொபைல் எண் இணைப்பது கட்டாயம் ஆகும்.