உள்ளூர் செய்திகள்

சத்குரு ஸ்ரீ ஞானானந்த ஆசிரமம், சத்பரி - மண்டலாபிஷேகம் நிறைவு

புதுதில்லி: சத்பரியில் சத்குரு ஸ்ரீ ஞானானந்த ஆசிரமம் உள்ளது. கடந்த மார்ச் மாதம் 16-ம் தேதி மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதன், தொடர்ச்சியாக தினமும் ஹோமம், அபிஷேகம் மற்றும் மண்டலாபிஷேக பூஜைகள் தொடர்ந்து செய்யப்பட்டு, அதன் நிறைவு விழா ஏப்ரல் 3-ம் தேதி நடைபெற்றது. காலை கணபதி பூஜையுடன் நிகழ்ச்சி துவங்கியது. அதைத் தொடர்ந்து, கோ பூஜை, பூர்வாங்க பூஜை, மஹான்யாச ஏகாதச ருத்ராபிஷேகம் மற்றும் கலச அபிஷேகம் நடைபெற்றது. ஸ்ரீராம் கனபாடிகள் இதனை நடத்தி வைத்தார். குரு சந்திரசேகரன் தலைமையில், வேத பண்டிதர்கள் மற்றும் ரித்விக்குகள் திரளாக இதில் பங்கேற்று பதினொரு ஆவர்த்தி ஏகாதச ருத்ரம் பாராயணம் செய்தனர். இதில், மூலவர் பாண்டுரங்கன், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ ஐயப்பன், பூஜ்ய ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகள், பூஜ்ய ஸ்ரீ ஹரிதாஸ்கிரி சுவாமிகள் மற்றும் ஸ்ரீ சீரடி சாய்பாபாவிற்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அனைத்து சன்னதிகளும் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் பாண்டுரங்கன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. காஞ்சி மடத்தின் சார்பில், சத்பரி ஸ்ரீ ஞானானந்த மண்டலியினர் மற்றும் குரு சந்திரசேகரன் ஆகியோருக்கு தில்லி ராமபத்ரன் பாகவதர் பிரசாதம் வழங்கி கெளரவித்தார்.- - நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !