உள்ளூர் செய்திகள்

கல்லும் கலையும்

கல்லானாலும் பொன்னாய் மின்னும் சிம்மவாஹினி!விழுப்புரம் - அனந்தபுரம் சாலையிலுள்ள பனமலை கிராம ஏரி, குளம், வயல்வெளி சூழ்ந்த மலைக்குன்று. சிறுசிறு படிக்கட்டுகளாய் செதுக்கப்பட்ட மலைக்குன்றில் பிரியும் இடதுவழி பாதையில் நடந்தால், இருள் சூழ்ந்த குகை. அதனுள் விளக்கொளியில் மின்னுகிறாள்... 'துர்கை, கொற்றவை, மகிஷாசுரமர்த்தினி' என போற்றப்படும் இறைவி!சுனைநீர் கடந்து...கி.பி.,700 - 728ல் பல்லவ மாமன்னன் ராஜசிம்மன் இம்மலைக்குன்றின் மீது தாளகிரீஸ்வரர் ஆலயத்தை எழுப்பி இருக்கிறான். ஆலயம் செல்லும் பாதையின் இருபுறமும் சுனை நீர் தேக்கங்கள். வலப்புற பாதை வழிகாட்டும் தாளகிரீஸ்வரர் ஆலய எழில்மிகு கற்சிற்பங்களை விஞ்சும் கலைநயத்துடன் இடப்புற குகைக்குள் சிம்மவாஹினி! எட்டு கரங்கள்; சங்கு, சக்கரம், கேடயம் ஏந்தியபடி, வலக்கரங்களில் ஒன்றை இடை மீதும், இடதில் ஒன்றை சிங்கத்தின் தலை மீதும் வைத்து அழகே வடிவாய் சிம்மவாஹினி. அணிந்திருக்கும் ஆடையிலும், அணிகலன்களிலும், இடதுகால் மடக்கி சிங்கத்தின் மீது வைத்திருக்கும் ஆளுமையிலும்... சிற்பியின் திறன் பளிச்சிடுகிறது! 'இந்த சிற்பத்தின் காலடியில் மகிஷன் தலை இல்லை; ஆக, இது மகிஷனுடனான போருக்கு சிங்கத்துடன் ஆயத்தமாகி நிற்கும் கம்பீர நிலை!' என்கிறார் வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன். 'கையில் தடியுடன் ஊரைக் காக்கிறாள்' எனும் நம்பிக்கையோடு பனமலை உள்ளிட்ட கிராமத்தினரால் வணங்கப்படுகிறாள் சிம்மவாஹினி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !