வளர் இளம் பருவத்தில், ஹார்மோன் சுரப்பு அதிகமாக இருக்கும். தோலில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில், சுரப்பும் அதிகமாக இருக்கும். இளம் பெண்களுக்கு, 14 -18 வயது வரையிலும், பருக்கள் அதிகமாக வருவதற்கு இந்த இரண்டும் முக்கிய காரணங்கள். மிக அதிக அளவில் பரு வரும் வயது, 17 - 21 வயது வரையிலும். இது தவிர, மரபியல் காரணங்களாலும், பருக்கள் வரலாம்.
'மேக் அப்'
எண்ணெய் பசை அதிகமாக முகத்தில் படும் தொழிற்சாலைகள், உணவு உற்பத்தி கூடங்கள், சமையல் கூடங்களில் வேலை செய்பவர்களுக்கு, தொடர்ந்து முகத்தில் அதிக அளவில் எண்ணெய் படும்; இதனால், பருக்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். தினசரி, 'மேக் அப்' போட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும், நடிகையர், 'மாடலிங்' செய்பவர்கள், முகத்தில் அடர்த்தியான, மேக் அப் போட்டு, தோலில் பல மணி நேரம் அப்படியே இருப்பர்; இது, முகத்தில் உள்ள துளைகளை அடைத்து விடுவதால், பருக்கள் ஏற்படும்.இதுபோல, தோலில் உள்ள துளைகள், எண்ணெய், மேக் அப்புடன் தொடர்ந்து பல மணி நேரம் அடைபடுவதால், இயல்பாக தோலில் உற்பத்தி ஆகும் எண்ணெய் பசை, வெளியல் வர முடியாமல், அங்கேயே தங்கி, பாக்டீரியா உற்பத்தி ஆகி, பருக்களை உண்டாக்கலாம்.
மன அழுத்தம்
பருக்கள் வருவதற்கு பிரதான காரணம் மன அழுத்தம்.அதேபோல, தோலில் இருக்கும் ரோமங்களை நீக்க, 'வேக்சின்' செய்வதால், பொரி பொரியாக சிவந்த பருக்கள் வந்து விடும்; வலியும் அதிகமாக இருக்கும். சிலருக்கு, அதிக அளவில் வியர்க்கும். இவர்கள், அடிக்கடி வியர்வையை துடைக்கிறேன் பேர்வழி என்று, அழுத்தி துடைப்பர்; இதனால், வியர்வையிலிருந்து வெளி வரும் அழுக்குகள், தோலில் உள்ள துவாரத்தில் அடைத்து, கிருமிகளை உருவாக்கி, பருக்கள் உண்டாகலாம்.பல காரணங்களால் உருவாகும் பருக்கள், வெறுமனே கட்டிகளாக இருப்பதில்லை. அதனுள், பாக்டீரியா கிருமிகள் சென்று தங்கி விடும். இவை, பருக்களின் நுனியில் உள்ள துளையை அடைத்து, குறிப்பிட்ட இடத்தில், பல கிருமிகளாக பெருகி, பருக்கள் சிவந்து, வலியை ஏற்படுத்தும்.சில நேரங்களில், கிருமி தொற்றின் காரணமாக, சீழ் கூட உருவாகும்.முகத்தில் பரு வந்தவுடன், 'இது முக அழகை கெடுக்கிறது, அதை உடனடியாக நீக்க வேண்டும்' என்ற பதற்றத்தில் தேய்த்து, கிள்ளி என்று பல வழிகளிலும் உடனடியாக அதை நீக்க முயற்சி செய்கிறோம். இவ்வாறு செய்யும் போது, அதிலிருந்து வரும் நீர், தோலில் படும் இடங்களில் எல்லாம் பருக்கள் வருகின்றன.மாதவிடாய் வருவதற்கு சில நாட்களுக்கு முன், வரலாம். அடுத்த மாதவிடாய் வருவதற்கு, 14 நாட்களுக்கு முன், கரு முட்டை உருவாகும். அந்த நாட்களில், ஹார்மோன் சுரப்பு அதிகரிப்பதால், பருக்கள் வரலாம். கர்ப்ப காலத்திலும் வரும் வாய்ப்பு உள்ளது; ஆனால், அந்த சமயத்தில் சிகிச்சை செய்து கொள்வதைத் தவிர்த்து, டாக்டரின் ஆலோசனையின் படி, வெளிப்புறத்தில் பூசக்கூடிய கிரீம்களை மட்டும் பயன்படுத்தலாம்.
கோவா பருக்கள்
'சன் பாத்' எடுப்பதற்காக, கோவா போன்ற கடற்கரை நகரங்களுக்கு செல்வர். கோவா மட்டுமல்ல, எந்த ஊரில் உள்ள கடற்கரைக்கு சென்று, சூரிய குளியல் எடுத்தாலும், பருக்கள் வரும். ஆனாலும், இதற்கு, 'கோவா பரு' என்று தான் பெயர். புகை பிடித்தால் பருக்கள் வரும்.பருக்களுக்கும், பால் பெருட்களுக்கும் நேரடியாக தொடர்பு உள்ளது. பரு அதிகமாக வரும் வயதில், பால் பொருட்களை அளவிற்கு அதிகம் சாப்பிட்டால், பருக்கள் வருவது அதிகமாகும். இனிப்பு அதிகம் சாப்பிடுவது, கார்போ ஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுவது, உணவில், 'ஒமேகா - 3' கொழுப்பு அமிலம் குறைவது, எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவது போன்றவற்றாலும் வரலாம்.பிறந்த குழந்தைக்கு, கன்னம், தாடை, கண் இமைகள், நெற்றியில் பருக்கள் ஏற்படலாம். ஒரு வயதிற்கு மேல், முகம் முழுக்கவே வரும் வாய்ப்பு உள்ளது. இளம் பெண்களுக்கு பொதுவாக, கன்னம், முதுகு, மார்பு பகுதியில் வரும். இளம் வயதில் பருக்கள் வராமல், 60 வயதில் வருவதும் உண்டு. சிலருக்கு, 30 வயதிற்கு மேல் வரும்.பருக்களை சரியான முறையில் சிக்ச்சை செய்யாவிட்டால், உருவான இடத்தில் குழிகள் ஏற்பட்டு, தழும்புகள் வரும். சில நேரங்களில், பள்ளம் பள்ளமாக, கறுப்பு, சிவப்பு திட்டுக்களாகவும் மாறலாம். சிலருக்கு வெள்ளைத் திட்டுக்களாக தோன்றலாம்.இதனால், முகம் பொலிவிழந்து, அதிக முதிர்ச்சியுடன் தெரியும். முகத்தில் இது போல தழும்புகள் இருப்பவர்களைப் பார்ப்பதற்கு, மிகுந்த கோபக்காரர்களாகத் தெரிவர். பல நேரங்களில், பருக்கள் இயல்பாக ஆறாமல், மிகுந்த வலி ஏற்பட்டு, முகம் கழுவ முடியாத அளவிற்கு வலி ஏற்படலாம். அந்த இடத்தில், தோல் இயல்பாக இல்லாமல், அடர்த்தியான தோல் வந்து விடும். மீண்டும் மீண்டும் இது போல தொற்று ஏற்பட்டால், முகமே விகாரமாக மாறலாம்.சுத்தமான தண்ணீரில், அடிக்கடி முகம் கழுவ வேண்டும். மென்மையான, முடிந்த அளவு, ரசாயனம் இல்லாத திரவ சோப்புகளை பயன்படுத்தலாம். 'ஸ்கின் டோனர்' பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.தியானம், யோகா பயிற்சி செய்து, மனதை அமைதியாக வைக்க வேண்டியது அவசியம். பருக்கள், தேவையில்லாத இடத்தில் ரோமம் வளர்வது போன்ற பல தோல் நோய்களுக்கு முக்கிய காரணம், ஹார்மோன் சுரப்பிகளின் சமச்சீரற்ற செயல்பாடு. மருத்துவ ஆலோசனைப்படி, இதை சரி செய்தாலே, தோலில் ஏற்பட்ட பிரச்னை சரியாகி விடும்.அழகு நிலையங்களுக்கு சென்று, 'பேஷியல், ஸ்க்ரப்பிங், ஸ்கின் லைட்டினிங்' என்று செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். வேதிப் பொருட்களைப் பயன்படுத்துவது, கரும் புள்ளிகள், பருக்களால் ஏற்பட்ட தழும்புகளை நீக்கும் போது, கூர்மையான ஊசி அல்லது கைகளை வைத்து சுரண்டி எடுக்கின்றனர்; இதனால், தோலில் பல பிரச்னைகளை உண்டாக்கும்.
பாதுகாப்பு நடவடிக்கை
டாக்டரிடம் ஆலோசனைக்கு சென்றால், முதலில் வெளிப்புறம் மட்டும் பயன்படுத்தக் கூடிய, 'ஆன்டிபயாடிக் கிரீம், பேஸ் வாஷ்' என்று சிபாரிசு செய்வர். இதில் பிரச்னை சரியாகாவிட்டால், ஆன்டிபயாடிக் மாத்திரைகளை, இரண்டு - மூன்று வாரங்கள் முதல், மூன்று மாதங்கள் வரை சாப்பிட வேண்டியிருக்கலாம்.நிரந்தர தீர்வுக்கும், எந்த பக்க விளைவுகளும் இல்லாத நவீன சிகிச்சை முறைகள் உள்ளன. லேசர் உதவியுடன், பருக்களால் ஏற்பட்ட குழிகளை, 'பில்லர்' வைத்து நிரப்பலாம்.பொதுவாகவே, கைகளை முகத்தில் வைப்பதை தவிர்க்க வேண்டும். அதிலும், பருக்கள் இருந்தால், கைகளை முகத்தில் வைக்கவே கூடாது. கையில் உள்ள பாக்டீரியா தாக்கி, பிரச்னையை பெரிதாக்கும்.மாதவிடாய் கோளாறுகள், வலிப்பு, காச நோய், ஹார்மோன் மாத்திரைகள் பருக்களை உண்டாக்கும் வாய்ப்பு உள்ளது. இவற்றை தவிர்க்க முடியாத பட்சத்தில், டாக்டரின் ஆலோசனைப்படி, மாத்திரைகளின் அளவை குறைப்பது அல்லது தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பது நல்லது.
டாக்டர் சினேகலதா கிருஷ்ணமூர்த்தி, தோல் மருத்துவர், சென்னை.99419 39309