கவலை வேண்டாம். கண்டு கொண்டால் போதும்
குழந்தைகளை நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும். காரணம், நாமும் குழந்தைகளாக இருந்திருக்கிறோம். இது எல்லாப் பெற்றோருக்கும் பொருத்தமான வாசகம் என்றாலும், குறைபாடுள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு மிகவும் பொருத்தமானது.சமீப காலத்தில், குழந்தைகளை மிகவும் பாதிக்கும் குறைபாடு, 'ஆட்டிசம்!' கடந்த, 10 ஆண்டுகளில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. சர்வதேச அளவில், 80 குழந்தைகளில், ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால், இந்தியாவில் எத்தனை குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர் என்பதற்கு, சரியான புள்ளி விவரங்கள் இல்லை. அதேநேரத்தில் ஆட்டிசம் என்பது, நோயல்ல; குறைபாடு தான் என்ற விழிப்புணர்வும், நம்மிடையே இல்லை.ஆட்டிசம் என்றால் என்ன?நரம்பியல் வளர்ச்சிக் குறைபாட்டால், பிறவியிலேயே ஏற்படும் சிக்கல் ஆட்டிசம். இதனால், எந்த இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், பழக வேண்டும், பேச வேண்டும் என்பது, இந்தக் குழந்தைகளுக்குத் தெரியாது. நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடு, மூளை வளர்ச்சியை பாதிப்பதால், இவர்களின் நடத்தை சாதாரண குழந்தைகளின் நடத்தை போல இருக்காது. மற்றவர்களோடு தொடர்பு கொள்வது, சமூக விஷயங்களை கற்றுக் கொள்வது பிரச்னையாக இருக்கும். ஆட்டிசம் பாதிப்பிற்கு காரணம் என்ன என்பது, உறுதியாக தெரியவில்லை என்றாலும், மரபியல் காரணிகள், கர்ப்பம் தரித்த நாளிலிருந்து கர்ப்பிணி சாப்பிடும் மருந்து, உணவு, தடுப்பு மருந்து, சுற்றுச்சூழல் மாசு போன்ற எதுவும் காரணமாக இருக்கலாம். ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸ்சாடர் ஏ.எஸ்.டி., எனப்படும், இந்த பிரச்னையும் ஆட்டிசம் போன்றது தான். இந்த பாதிப்பினால், குழந்தைகளின் நடத்தை குறிப்பிட்ட மாதிரி மட்டும் இருக்கும். ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் நடவடிக்கை ஒரே மாதிரியாக இருக்காது. நடத்தையில் என்ன பிரச்னை உள்ளது என்பதைத் தெரிந்து, அதற்கேற்ப பயிற்சிகள் தர வேண்டும்.எப்படி கண்டுபிடிப்பது?ஆறு மாத குழந்தையிலேயே மனிதர்களை அடையாளம் கண்டு, கண்களைப் பார்த்து சிரிக்கும். குறைபாடு இருந்தால், தலையை சாய்த்து எங்கோ பார்க்கும். ஒரு வயதில், அந்த வயதிற்கான இயல்புடன் இருக்காது.