நோய் எதிர்ப்பு சக்தி மாதுளையில் உண்டு
மாதுளம்பழச் சாறையும், அருகம்புல் சாறையும் சம அளவு கலந்து குடித்து வந்தால், சூட்டினால் மூக்கிலிருந்து ரத்தம் வடிவது நிற்கும். இது உடலுக்குக் குளிர்ச்சியையும் தரும். மாதுளம் பழத்துக்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு. மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இதில் இனிப்பு, புளிப்பு இரண்டு ரக மாதுளையும் சக்தியளிக்கும். மாதுளையின் பழம், பூ, பட்டை ஆகிய அனைத்தும், மருத்துவ குணங்கள் நிறைந்தது. இப்பழத்தை சாப்பிடுவதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும், வைரஸ் கிருமிகளை துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால், நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில், மாதுளைக்கு இணை மாதுளைதான்.இதில், இனிப்பு பழத்தைச் சாப்பிட்டால் இதயத்துக்கு, மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது. இருமலை நிறுத்துகிறது. புளிப்பு பழத்தை சாப்பிட்டால், வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. ரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது.தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. பெப்டிக் அல்சர், டியோடினல் அல்சர், கேஸ்ட்ரிக் அல்சர் முதலிய அல்சர் வகைகளை குணமாக்குகிறது.