உள்ளூர் செய்திகள்

முதுகு பிரச்னையை தீர்ப்பது எளிது!

மிருகங்களை போல, மனிதர்களும் நான்கு கால்களால் நடக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டவர்கள் தான். நிமிர்ந்து நிற்பது நம் இயல்பு அல்ல. பரிணாம வளர்ச்சி அல்லது சிலர் கூறுவது போல கடவுளின் சித்தப்படி, நிமிர்ந்து நிற்கும் திறனை நாம் பெற்று விட்டோம். இந்த திறன் நமக்கு சும் மா கிடைத்து விடவில் லை. 80 சதவீத மனிதர்கள், வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில், கீழ் முதுகு வலியால் அவதிப்படுகிறோம்.  முதுகுத் தண்டு வடம், ஒன்றன் மீது ஒன்று அமைந்த வகையிலான சிறிய முள்ளெலும்புகளால் ஆனது. இந்த எலும்புகளுக்கிடையே உள்ள நீரும், வழுவழுப்பான சதையும், எலும்புகள் ஒன்றோடு ஒன்று தேயாமல் தடுக்கின்றன. இவை, முதுகு தண்டுவடத்துடன் ஒட்டிய சதை மற்றும் ஜவ்வுகளின் ஆதரவுடன் செயல்படுகின்றன.  நாம் நிமிர்ந்து நிற்கும் போது, தண்டுவடத்தின் கீழ் பகுதி, மேல் பகுதியில் உள்ள எடையை தாங்கி கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. புவியீர்ப்பு விசையின் காரணமாகவும், முதுகு கீழ் பகுதியில் அழுத்தம் ஏற்படுகிறது. சிலருக்கு, கீழ் பகுதி எலும்புகள் சரியான வளர்ச்சி இன்றியும் இருக்கும்.

இந்த முள்ளெலும்புகளுக்கு இடையிலிருந்து வெளிவரும் சில நரம்புகள் தான், கை, கால்களுக்கு செல்கின்றன. இந்த முள்ளெலும்புகளில் தேய்மானம் அல்லது சரியான முறையில் ஒன்றன் மேல் ஒன்று பதியாமல் இருத்தல் ஆகிய காரணங்களால், இவற்றின் இடை யே செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு, முதுகு வலி ஏற்படுகிறது. சிறு வயது  குழந்தைகள், பெரும்பாலும் வலியால் அவதிப்படுவதில்லை. இடைநிலைப் பள்ளி குழந்தைகள், புத்தகச் சுமை  காரணமாக, முதுகு மற்றும் தோள் வலியால் அவதிப்படுகின்றனர். முதுகு அமைப்பிலேயே பாதிப்பு ஏற்படுவதால் அவதிப்படும் குழந்தைகள் மிகக் குறைவே.   புத்தகம், தண்ணீர் பாட்டில் ஆகியவற்றுடன், பையை தோளில் மாட்டிக் கொள்ளும் போது, உடலின் புவியீர்ப்பு மையத்தில் மாறுபாடு ஏற்பட்டு, சதை மற்றும் தசைகளில் வலி ஏற்படுகிறது. வகுப்பு நேரத்தில், தொடர்ந்து பெஞ்சில் அமரும் படி ஏற்படுகிறது. பெஞ்சும் நல்ல முறையில் வடிவமைக்கப்படாமல் இருக்கும். குழந்தைகளுக்கு ஏற்ற உயரத்தில் அமையாமல், முதுகு பகுதிக்கு சரியான சாய்மானம் இல்லாமல் இருக்கும்.வீட்டுப் பாடத்தை தரையில் அமர்ந்து எழுதுவது, முதுகை வளைத்தபடி சோபாவில் அமர்ந்து எழுதுவது ஆகியவையும் முதுகுவலியை அதிகரிக்க செய்யும்.

ஆண்களை விட பெண்கள், முதுகுவலியால் அதிகம் அவதிப்படுகின்றனர். நாகரிக செருப்புகள் அணிந்தால், உடலின் புவியீர்ப்பு மையம் மாறுபாடு அடைகிறது. ஆங்கில எழுத்தான 'எஸ்' வடிவில் அமைந்துள்ள முதுகுத் தண்டுவடம், பெண் மகப்பேறு அடையும் போது, மேலும் வளைந்து விடுகிறது. சிலருக்கு ஹார்மோன் மாறுபாட்டால்,  முள்ளெலும்புகளுக்கு இடையில் உள்ள ஜவ்வு நழுவி, வலி ஏற்பட்டு வாழ்க்கை முழுவதும் அவதிப்படும் நிலை ஏற்படுகிறது. உடல் உழைப்புக்கு பழக்கப்படாதோர், திடீரென குனிந்து, நிமிர்ந்து பணி செய்யும் போதோ, எடை அதிகம் கொண்ட பொருட்களை தூக்கும் போதோ, தசைகள் ஒத்துழைக்காமல் முதுகு வலி ஏற்படும். உடல் எடை அதிகரித்தாலும், முதுகுத் தண்டு வடத்தை பதம் பார்க்கும். நடக்கும் போதெல்லாம் உடல் எடையை தூக்கி கொண்டு நடக்க வேண்டிய நிலை ஏற்படுவதால், முதுகில் கடுமையான வலி ஏற்படும். வயது ஏற ஏற, முள்ளெலும்புக்கு இடையில்  உள்ள நீர் வற்றி, தசைகள் சுருங்கி வலுவிழந்து விடுவதால், பயன்பாட்டுக்கு அப்பாற்பட்ட நிலையை எட்டி விடுகின்றனர். எலும்புகளில் சுண்ணாம்பு குறைவதால், அவையும் வலுவிழக்கின்றன. எலும்புகள் ஒன்றுக்கொன்று  தாறுமாறாக ஒட்டிக் கொள்வதால், வயதானர்களின் உயரமும் குறைகிறது. இதனால் அடிக்கடி முதுகு வலி ஏற்படுகிறது.முதுகுவலியின் முதல் அறிகுறிக்கு, அதிக பரிசோதனை தேவைப்படாது. ஆறு மாதங்களுக்கு வலி தொடர்ந்தாலோ, கால் தசைகள் வலுவிழந்தாலோ, செயலற்றுப் போகும் போதோ சிறுநீர், மலம் வெளியேற்றுவதில் கட்டுப்பாடு குறைந்தாலோ, சிறுநீருடன் ரத்தமும் சேர்ந்து வெளியேறினாலோ, தலைவலியுடன் வாந்தியும் வந்தாலோ அவசியம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

துவக்க நிலையில், எக்ஸ்-ரே பரிசோதனை எடுக்கப்படும். என்ன பிரச்னை உள்ளதென்பதை எக்ஸ்-ரே மூலம் கண்டறியலாம். சில நேரங்களில் ரத்தப் பரிசோதனையும் செய்ய வேண்டி வரும். பெரும்பாலான முதுகுவலிகள், சில  நாட்களிலேயே மறைந்து விடும். எனவே, வலி ஏற்பட்ட உடனேயே மருத்துவரிடம் செல்வதை விட, சில நாட்கள்  பொறுத்திருந்து வலி நீடித்தால் மருத்துவரிடம் காண்பிக்கலாம்.   நீங்கள் அமரும் அல்லது நிற்கும் நிலை, காலணி, அமரும் நாற்காலி அல்லது சோபா ஆகியவற்றில் மாற்றம் செய்ய வேண்டுமா என்பது குறித்தும் ஆராய வேண்டும். உன்னிப்பாக கவனித்து செயல்பட்டால், பெரும்பாலான முதுகு வலியை தவிர்த்து விடலாம். போதுமான அளவு ஓய்வில்  இருத்தல், வலி நிவாரணி எடுத்து கொள்ளுதல், வலி குறைக்கும் பட்டைகள் கட்டிக் கொள்ளுதல், மென்மையான  படுக்கையில் படுக்காமல் தரையில் படுத்தல், தசை சீர்படுத்தும் மாத்திரைகள் உட்கொள்ளுதல் ஆகியவை மேற்கொண்டால், வலியிலிருந்து நிவாரணம் பெறலாம். உடல் எடையை குறைப்பதிலும் முனைப்பு காட்ட வேண்டும். உடல் எடையுடன், 'பி.எம்.ஐ.,' அளவு சரியாக ஒத்து போகிறதா என்பதையும் அடிக்கடி கண்காணிக்க வேண்டும்.நெடுநேரம் நின்றபடி பணி செய்ய வேண்டி இருந்தால், கால்களை மாற்றி மாற்றி தரையில் ஊன்றி, பணி செய்தால் அதிக வலி ஏற்படாது. குத்துக் காலணி அணிவதை முற்றிலும் தவிர்க்கவும். உங்கள் கால்களுக்கு ஏற்ற வகையிலும், நடக்கும் போது உடல் எடை, கால் முழுவதும் சீராக பரவும் வகையிலும் செருப்பு அணிய வேண்டும். கைப் பையை ஒரே தோளில்  தொடர்ந்து மாட்டிக் கொள்ளாமல், அடிக்கடி மாற்றி மாட்டிக் கொள்ள வேண்டும்.  இரு கைகளையும் பயன்படுத்தி,  பாத்திரங்கள் தூக்குவது, பெருக்குவது, தரை துடைப்பது ஆகியவை முதலில் கடினமானவையாக தோன்றும். இந்த வேலைகளை பழக்கி கொண்டால், முதுகுத் தண்டு வடம் நல்ல முறையில் இயங்க இவை உதவும். உடலின் இரு பகுதிகளுக்கும் சமமாக வேலைகள் இருப்பது அவசியம்.கர்ப்பிணிப் பெண்கள், குழந்தை பிறப்பதற்கு முன்னும், பிறந்த  பிறகும் உடற்பயிற்சி செய்தால், முதுகுக்கு அதிக பிரச்னை ஏற்படாது. உடலும், முதுகுத் தண்டு வடமும் ஏற்கனவே இருந்த வடிவமைப்புக்கு திரும்பும். யோகா, ஏரோபிக்ஸ், போர் பயிற்சிகள் தண்டு வடத்திற்கு சிறந்த பயிற்சி அளிக்கின்றன. புத்தகங்கள், ஆசிரியர்கள், 'டிவி' மற்றும் வெப்சைட்டுகள் மூலம் இந்த பயிற்சிகள் குறித்து விளக்கம் பெறலாம். பத்து வயது முதல் தினமும் சில நிமிடங்களாவது முதுகுக்கு நல்ல பயிற்சி கொடுத்தால் திடமான, நிமிர்ந்த தோற்றத்தை பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !