27செப்டம்பர் 2014: ஒரு டாக்டரின் டைரி குறிப்பு
ஜன்னலின் வழியே, தோட்டத்தை பார்த்து கொண்டிருந்த ஷீலா, கம்பியில் உலர்ந்து கொண்டிருந்த குழந்தையின் ஆடைகளை பார்த்ததும், அழ ஆரம்பித்தார். அவரது கணவனும், கண் கலங்கி, எனக்கு போன் செய்தார். 'அவளை சமாதானப்படுத்த உங்களால் மட்டுமே முடியும்; போனை அவளிடம் தருகிறேன்; தயவுசெய்து பேசி, அவளை ஆறுதல்படுத்துங்கள்' என்றார். போனை வாங்கிய ஷீலாவின், அழுகை கூடியது. 'அந்தக் குழந்தை இறந்தது, என் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. அந்த பிஞ்சு விரல்களின், ஸ்பரிசத்தால் ஏற்பட்ட உணர்வுகள் பசுமையாகவே உள்ளன; இன்னும் அதை உணர்கிறேன். நான் என்ன செய்தும், அதை மறக்க முடியவில்லை' என்றாள். ஷீலாவின் அந்த துயரத்திற்கு காரணம், அவளது நாத்தனார் எஸ்தருக்கு நடந்த சம்பவம். அப்படி என்னதான் நடந்தது எஸ்தருக்கு?ஷீலாவிற்கு முன்பே எஸ்தருக்கு, திருமணம் நடந்து விட்டது. இறந்த குழந்தை, எஸ்தருடையது. சில ஆண்டுகளுக்கு முன், எஸ்தருக்கு கரு சினைப்பையில் தங்கி, இரண்டு மாத கரு கலைந்து விட்டது. இதற்கிடையே, குடும்ப பிரச்னைகளால், ஷீலாவும், எஸ்தரும் பேசுவதை நிறுத்திக் கொண்டனர். சிறிது காலத்தில், எஸ்தர் மீண்டும் கர்ப்பமானார். எட்டு மாத கருவை வயிற்றை சுமந்திருக்கையில், பனிக்குடம் உடைந்து, நீர் கசிவு ஏற்பட்டது. சென்னையிலுள்ள, அரசு மருத்துவமனை ஒன்றில், அனுமதிக்கப்பட்டார்; சுகப் பிரசவத்துக்காக, மருத்துவர்கள், இரண்டு நாட்கள் காத்திருந்தனர். இதற்கிடையே, கருப்பைக்குள் இருந்த குழந்தை, பனிக்குடத்தில் இருந்த நீரை குடித்து விட்டது. இதனால், குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் என்பதை அறிந்து, அதை தவிர்க்க, அறுவை சிகிச்சை மூலம், குழந்தையை வெளியே எடுத்தனர். ஆனால், பிறந்த குழந்தை அழவில்லை. அதனால், மூளைக்கு செல்லும் சுவாசம் தடைப்பட்டது. ரத்த ஓட்டமும் தடைபட்டு, குழந்தை தனித்து சுவாசிக்க முடியாததால், 'வெண்டிலேட்டர்' எனப்படும், செயற்கை சுவாச கருவியில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு நாளைக்கு குறைந்தது, 20, 30 முறையாவது, பச்சிளம் குழந்தைக்கு வலிப்பு வந்து வாட்டி எடுத்தது. ஷீலா, என்னை தொடர்பு கொண்டார். பின் குழந்தையை, அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மாற்றினார்.குழந்தை பிறந்து, மூன்று வாரங்கள் கழித்து, தானே சுவாசித்து கொண்டிருந்த நிலையில், 'ஸ்கேன்' செய்யப்பட்டது. அதில், குழந்தையின் உடலிலுள்ள ரத்தம் முழுவதும், பூஞ்சை தொற்று பரவி இருந்தது. இதனால், நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு, அது, ஒவ்வொரு உறுப்பையும் பாதிக்க வைத்தது. இதில் என்ன ஒரு அதிசயம் என்றால், குழந்தை பிறந்தது முதல், எஸ்தருக்கு, ஒரு சொட்டு பால்கூட சுரக்கவில்லை. இதனால், ஷீலா தன் குழந்தையோடு சேர்த்து, எஸ்தரின் குழந்தைக்கும் தாய்ப்பால் கொடுத்தார். எஸ்தரின் குழந்தையை தன் குழந்தையாகவே பாவித்து, கவனித்து வந்தார். குழந்தை, நாளுக்கு நாள் மோசமடைந்தது. நுரையீரல் மற்றும் கால்களிலிருந்து ரத்தம் தானாக வெளியேறியது. நோய் எதிர்ப்பு மருந்துகள் எதுவும் பலன் தரவில்லை. ஒரு கட்டத்தில், குழந்தையின் உடலில் இருந்து 5 மி.லி., அளவு ரத்தம் எடுக்கப்பட்டு, பதிலாக, புது ரத்தம் பாய்ச்சப்பட்டது. எதுவுமே பயனளிக்கவில்லை; குழந்தை இறந்து விட்டது. 'செப்சிஸ்' எனப்படும், நோய்த் தொற்றை ஏற்படுத்தும் நோய்க் காரணி, பல்வேறுபட்ட சூழல்களில் வாழும். ஆனாலும், வீரியமுள்ள நோய்க் காரணிகள், நோய்களை ஏற்படுத்தும் தன்மையைக் கொண்டிருக்கையில், நோய் உண்டாதல் தவிர்க்க முடியாமல் போகிறது. நோய் எதிர்ப்பாற்றல் முறையும், உடலுக்கு உபயோகமான பாக்டீரியாக்களும், ஏதோ ஒரு வகையில், பாதிப்புக்கு உள்ளாகும் போது, இந்த நோய்க் காரணிகளுக்கு, அந்த நிலைமை சாதகமாக மாறி, அவை மனித உடலில் சென்று, பல்கிப் பெருகி, நோயை ஏற்படுத்துகிறது. செப்சிசினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றுவது, சிரமம்தான். செப்சிஸ் நோய் எந்த வகையிலும் ஏற்படலாம். ஷீலா, எஸ்தர் என்ற, இரண்டு தாய்களுக்கும், ஒரு குழந்தையின் இழப்பு, ஏற்க முடியாததாக இருந்தது. - ஜெ. குமுதா, பச்சிளம் குழந்தைகள் நல நிபுணர்,சவீதா மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை, சென்னை.94440 23733.