சுவாசப் பாதையே ஒமைக்ரானின் இலக்கு!
புதிதாக ஒரு வைரஸ் உருவானால், அதிலிருந்து நுாற்றுக்கணக்கான வைரஸ் பதிவுகள், தன்னுடைய மரபணுவான, ஆர்.என்.ஏ., - டி.என்.ஏ., அமைப்பை மாற்றி, உருமாறிக் கொண்டே இருக்கும். அப்போது தான் புதிதாக உருவான வைரசால், நிரந்தரமாக உயிர் வாழ முடியும்.துவக்கத்தில் உருவான கொரோனா வைரசில் இருந்து மாற்றம் அடைந்து, 'ஆல்பா, பீட்டா, டெல்டா' என்று பல கொரோனா பதிவுகள் வந்தன; தற்போது ஒமைக்ரான். புதிதாக உருவான வைரசால் நமக்கு பாதிப்பு ஏற்பட்டு, அதனால் எப்போது அறிகுறிகள் வெளியே தெரிய ஆரம்பிக்கிறதோ, அப்போது தான் புதிய வைரசை நாம் அடையாளம் காண்கிறோம்.டெல்டா வைரஸ் வருவதற்கு முன், நுாற்றுக்கணக்கான வைரஸ் வந்திருக்கும்; அவை நம்மை பெரிதாக பாதிக்கவில்லை. அதனால் நாம் அவற்றை அடையாளம் காண வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஆனால், கொரோனா இரண்டாவது அலையில், டெல்டா வகை வைரஸ் மிகுந்த பாதிப்பு ஏற்படுத்தியதால், அதை அடையாளம் கண்டு கொண்டோம்.அறிகுறிகளுடன் நம்மை பாதிக்கும் போது, இது என்ன வகை நுண்ணுயிரி என்று ஆராய்ந்து, கிரேக்க மொழி அட்டவணையை பின்பற்றி, அதற்கு ஒரு பெயர் கொடுப்போம்; இது தான் வழக்கம். இப்போது நாம் அடையாளம் கண்டிருப்பது ஒமைக்ரான்.இரண்டாவது அலையில் பரவிய டெல்டாவை விடவும், பல மடங்கு அதிக வேகத்தில் பரவக் கூடியது இது; பாதிப்பு குறைவாகவே இருக்கும். இதற்கு முன் வந்த டெல்டா, நுரையீரலை நேரடியாக தாக்கியது; இணை நோய்கள் இருப்பவர்களை அதிகம் பாதித்தது. ஆனால், ஒமைக்ரான் இதிலிருந்து வேறுபட்டது. மூக்கில் இருந்து துவங்கி, சுவாசப் பாதையில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது; இதனுடைய அறிகுறிகள் மிதமாகவே இருக்கும்.ஆனால், பரவல் மிக அதிகம். இருமும் போது, தும்மும் போது, ஏன் மூச்சுக் காற்றின் வழியாகவும் வேகமாக பரவும். பாதித்த முதல் நாள் லேசாக காய்ச்சல் வரும். முதல் மூன்று நாட்களில் சரியாகி விடுவதால், இந்த குளிர், பனி காலத்தில் வழக்கமாக வரும் பாதிப்புகள் இவை என்று நினைத்து விடுகிறோம்.ஆனால், வைரஸ் முற்றிலும் அழியாமல் அப்படியே இருந்து, சத்தமே இல்லாமல் மற்றவர்களுக்கு பரவ காரணமாகி விடுவோம். டெல்டா வகையில், பாதித்த ஏழு நாட்களுக்கு பின் வெளியில் தெரிந்து, அறிகுறிகள் தீவிரமாகி, சிகிச்சைக்கு பின் குறையும்; இது நேர் எதிராக உள்ளது. அறிகுறிகள் இல்லாததால் கொரோனா பரிசோதனை செய்வதில்லை. அதனால் தான், இது ஒரே நேரத்தில் பல மடங்கு அதிகமாக பரவுகிறது.ஆஸ்துமா, மூச்சிரைப்பு உட்பட சுவாசக் கோளாறுகள் உள்ளவர்கள், கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். 15 - 18 வயதுள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது, பரவலை மேலும் கட்டுப்படுத்த உதவும்.தடுப்பூசியால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை என்பதால், என்னை கேட்டால், வெளிநாடுகளை போல நாமும், 10 வயதில் இருந்தே தடுப்பூசி போடுவது நல்லது.சாப்பிடுவதற்கு முன் கை கழுவுவது நம் வழக்கமாக இருப்பதை போன்று, தற்போது மற்றவர்களை சந்தித்து பேசிய பின் கை கழுவுகிறோம்; முக கவசத்துடன் பேசுகிறோம். இது நம் வழக்கமாகி விட்டது; இதை அப்படியே பின்பற்ற வேண்டும்.டாக்டர் சி.ஆறுமுகம்,சுவாசக் கோளாறுகள் சிறப்பு மருத்துவர்,ரேலா மருத்துவமனை,சென்னை.